சென்னை நீலாங்கரையில் எதிரே வந்தவரின் சிறு தவறு.. ஏறி இறங்கிய கழிவுநீர் லாரி.. மற்றொரு மாணவி படுகாயம்
சென்னை: சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் கல்லூரி மாணவிகள், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவரகளின் வாகனம் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலைக்கு சென்ற போது, எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்துக்கு வழி விடுவதற்காக ஒதுங்கியது போது, கழிவுநீர் லாரி மோதியது. இதில் சக்கரத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவி பலியானார். மற்றொரு மாணவி படுகாயம் அடைந்தார்.
சென்னையில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிக கவனமாக செல்ல வேண்டும். பிரேக் சரியாக உள்ளதா, இண்டிகேட்டர் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. சாலையில் ஓரத்தில் சென்று நடுபகுதியை கடந்து இன்னொரு சாலையை கடக்கும் போது மிகமிக கவனமாக செல்ல வேண்டும். ஏனெனில் அசுர வேகத்தில் வரும் வாகனங்கள், சாலையை கடப்பவர்களை பற்றி கொஞ்சமும் யோசிப்பது இல்லை..

மிகமிக வேகமாக சென்னையில் பல சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்கிறார்கள். ஓஎம்ஆர் சாலையில் எல்லாம் சாலையில் இடதுபுறம் செல்ல வேண்டியவர் வலபுதுபுறம் ஓரமாக போகிறார் என்றால், அவரால் கண்டிப்பாக இடதுபுறம் திரும்பவே முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு அசுர வேகத்தில் செல்வார்கள். சென்னையில் ஓஎம்ஆர் சாலை என்று இல்லை.. பல சாலைகளில் இதுதான் நிலை. சிக்னல்களில் சொல்லவே வேண்டாம். சிக்னல் மட்டும் இல்லை என்றால், சென்னையில் நடந்து செல்வோர் நடக்கவே முடியாது..அந்த அளவிற்கு நடந்து செல்வோரை மதிக்கவே மாட்டார்கள்.
இருசக்கர வாகனத்தின் பின்னால் அரசு பேருந்தோ அல்லது தண்ணீர், கழிவு நீர் லாரியே சென்றால், மறந்து மெதுவாக சென்றாலோ அல்லது முன்னால் செல்பவர் பிரேக் பிடிக்கிறார் என பிரேக் பிடித்தால் உயிருக்கு நிச்சயம் உத்தரவாதம் கிடையாது. ஏனெனில் கண்டிப்பாக மோதுவதற்கு வாய்ப்பு அதிகம். அப்படித்தான் கழிவு நீர் லாரியாலும், எதிர்திசையில் வந்தவராலும் விபத்து நடந்துள்ளது.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் கேத்தரின் (வயது 19) மற்றும் லிஸ்வந்தி (19) இருவரும் தோழிகள் ஆவர். இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலைக்கு கலைஞர் கருணாநிதி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மீது சென்றபோது எதிர் திசையில் திடீரென இருசக்கர வாகனம் வந்தது. அதற்கு வழி விடுவதற்காக வலது பக்கத்தில் இருசக்கர வாகனத்தை மாணவிகள் சிறிது நகர்ந்துள்ளார். திடீரென ஓரம் போனதால், பின்னால் வந்த கழிவுநீர் லாரி இவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவி கேத்தரின் மீது கழிவுநீர் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய கேத்தரின் அதே இடத்தில் உயிரிழந்தார். மற்றொரு மாணவி லிஸ்வந்தி படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து உடனே அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் நீலாங்கரை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் கல்லூரி மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications