பாஜகவில் இணைந்தார் காமெடி நடிகை ஆர்த்தி.. கருணாநிதி - ஜெயலலிதாவுக்கு சமமானவர் அண்ணாமலை என புகழ்ச்சி
சென்னை: பிரபல காமெடி நடிகை ஆர்த்தி பாஜகவில் இணைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இருந்து விலகி இருந்த நடிகை ஆர்த்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார்.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக இருப்பவர் ஆர்த்தி. நடிகர் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளபட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிரபலமானவர்.

இவரது கணவர் பெயர் கணேஷ்கர். இவரும் நடிகராக உள்ளார். நடிகை ஆர்த்தி அதிமுகவில் செயல்பட்டு வந்தார். அதாவது கடந்த 2014ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து நடிகை ஆர்த்தி செயல்பட்டு வந்தார். நட்சத்திர பேச்சாளராக தேர்தல் சமயங்களில் மேடைகளில் தோன்றினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்த்தி அதிமுகவில் இருந்து விலகினார். இந்நிலையில் தான் நடிகை ஆர்த்தி, கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அவரது கணவர் கணேஷ்கர் ஏற்கனவே பாஜகவில் செயல்பட்டு வரும் நிலையில் ஆர்த்தியும் பாஜகவில் ஐக்கியமானார்.
முன்னதாக நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் ஆர்த்தி பேசினார். அப்போது, ‛‛இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உள்ளது. நான் பிறந்த மண்ணான கோவையில் பாஜகவில் இணைவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. முருகனுக்கும், அல்லாவுக்கும், இயேசுவுக்கும் நான் நன்றி சொல்கிறேன். என்னை அனைவரும் வாழ்த்த வேண்டும். பாஜகவில் இது எனது கன்னி பேச்சு. பாஜகவில் முதல் மேடை ஏறியுள்ளேன்.
நான் ஒரு நடிகை. சிரிக்க வைக்கும் நடிகை. சிந்திக்க வைக்கவும் வந்திருக்கிறேன். கருணாநிதியின் வசனத்தில் படம் நடித்துள்ளேன். இதனால் என்னையும், என் கணவர் கணேஷ்கரையும் கருணாநிதிக்கு ரொம்ப பிடிக்கும். அவர் தான் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் திமுகவில் ஒருநாள் கூட நாங்கள் இல்லை. ஆனாலும் கருணாநிதியால் தான் அரசியலுக்குள் தவழ்ந்தோம்.
அதன்பிறகு ஜெயலலிதா என் கரங்களை பிடித்து நட்சத்திர பேச்சாளராக உயர்த்தினார்கள். 3 தேர்தலில் ஜெயலலிதாவுக்காக நான் மக்களை சந்தித்து இருக்கிறேன். 3 முறையும் ஜெயலிதா வெற்றி பெற்றாங்க. என்னுடைய உண்மையான உழைப்புக்கு ஜெயலலிதா என்னை பாராட்டி இருக்கிறார். பரிசு வழங்கி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் விலகல் கடிதம் கொடுத்து வெளியேறினேன்.
கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு நன்றாக வழிநடத்தும் தலைவரை நான் பார்க்கவே இல்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற 2 கட்சிகள் தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களை தாண்டி எந்த கட்சியும் வரவிடாமல் செய்துவிட்டனர். நல்ல அண்ணன் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ஆனால் அவரையும் காமெடியாக்கி உட்கார வைத்துவிட்டனர்.
ஆனால் இப்போது திமுக, அதிமுகவுக்கு சிம்ம சொப்பணமாக அண்ணாமலை வந்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இன்று இருந்தாலும் கூட அவர்களுக்கு சமமாக போட்டியிட அவர்களை விட அதிகம் படித்த திறமையோடு, வீரத்தோடு, தன்னம்பிக்கையோடு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு வந்துள்ள அண்ணாமலையை முதலில் அவர்கள் தங்களுடன் சேர்த்து இருப்பார்கள். ஏனென்றால் அவரது அருமையை அவர்கள் 2 பேரும் புரிந்து இருப்பார்கள்.
இருப்பினும் இன்று பிரதமர் மோடி புரிந்து வைத்துள்ளார். அப்துல் கலாம் இளைஞர்களை கனவு காணுங்கள் என்று கூறினார். அப்படியான யூத் ஐகானாக மலை.. அண்ணாமலை உள்ளார். அவர் கோவையில் போட்டியிடுகிறார். தாமரை சின்னத்தில் கோவையில் அண்ணாமலை வேட்பாளராக நிற்பது என்பது நமக்கு எல்லாம் மிகப்பெரிய கவுரவம். ஏனெ்னறால் நாம் இன்று போடும் ஒவ்வொரு ஓட்டும் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலையை நாளைக்கு எம்பியாக்கும். 2016ல் முதல்வராக்க போகிறது'' என பேசினார்.












Click it and Unblock the Notifications