மாஸ்க் அணிந்து பேசிக்கொண்டிருந்ததால் சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம்.. துரைமுருகன் வருத்தம்
சென்னை: மாஸ்க் அணிந்து பேசிக்கொண்டிருந்த காரணத்தால் சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்காம் என கூட்டணி கட்சிகள் வருவது போவது குறித்த கருத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வேலூர், காட்பாடியில் தி.மு.க பொதுச்செயலாளரும் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான துரைமுருகன் தலைமையில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய துரைமுருகன்,
"தேர்தல் காலத்தில், சீட்' பத்தலை, கேட்ட தொகுதி கிடைக்கலை போன்ற காரணங்களால் கூட்டணியிலிருக்கும் கட்சிகள் வெளியே போகலாம். வேறு கூட்டணியிலுள்ள கட்சிகளும் எங்களுடன் வந்து சேரலாம் என்றார். துரைமுருகனின் கருத்து சர்ச்சையான நிலையில் அதற்கு விளக்கம் தெரிவித்து வருத்தமும் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் யார் யார்?
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (2.10.2020) கிராம சபைக் கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, என்னை சந்தித்த செய்தியாளர்கள், தி.மு.க. கூடடணியில் யார் யார் இருப்பார்கள்? என்று கேள்வி கேட்டார்கள்.

கடந்த கால சம்பவங்கள்
அதற்கு இப்பொழுது எதையும் அறுதியிட்டு, இறுதியிட்டு சொல்ல முடியாது. தேர்தல் காலங்களில் இறுதி நேரத்தில்கூட, கட்சிகள் இடம் மாறுவது உண்டு. அப்படி. இங்கே இருப்பவர்கள் அங்கே போவதும், அங்கே இருப்பவர்க்ள இங்கே வருவதுங்கூட கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கிறது" என்று தான் நான் கூறினேன்.

வாயில் மாஸ்க் அணிந்திருந்தேன்
வாயில் மாஸ்க் அணிந்து பேசிக்கொண்டிருந்த காரணத்தால், சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். அதனை நான் ஒருமையில் பேசியதாக சில பத்திரிக்கைகள் வெளியிட்டிருப்பதாகவும் அதனால் எங்களிடத்தில் ஆழ்ந்த உறவோடு இருக்கக்கூடிய சிலர் வருத்தம் அடைந்திருப்பதாகவும் எனக்கு செய்திகள் வந்தது.

இனி அப்படி நடக்கமாட்டேன்
நான் அவ்வாறு கூறவில்லை. அப்படி கூறியதாக எடுத்துக்கொண்டாலும் அதற்காக நான் மெத்த வருத்தப்படுகிறேன். பொதுவாக நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எனது பேச்சு மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எனவே யாருடைய உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால், அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் எல்லோரிடத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நீண்ட காலமாக என்னை அறிந்தவர்கள், அப்படி நினைக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். இருந்தாலும் இனி இப்படி நிகழா வண்ணம் நானும் நடந்து கொள்வேன்" இவ்வாறு துரைமுருகன் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications