கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க குழு! தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி!
சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க குழு அமைத்து ஆணை வெளியிட்டதற்காக தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று இந்த அரசாணையை அரசு வெளியிட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

சிறுபான்மையினர் அந்தஸ்து
கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் வழிமுறைகள் உருவாக்க, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று இந்த அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றேன்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்
கடந்த 22.04.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நான் உரையாற்றிய போது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான Minority Status Certificate. அதாவது, சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழைப் பெறுவதற்காக இப்போது தேசிய சிறுபான்மை ஆணையத்திற்குச் செல்ல வேண்டிய ஒரு நிலை இருக்கின்றது.

கோரிக்கை வைத்தேன்
இதனால் பெரும் சிரமங்களை தமிழகத்தில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அனுபவித்து வந்தன. இந்த சிரமங்களை நீக்குவதற்கு தமிழ்நாடு அரசே சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழை வழங்க வேண்டும்.தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசே அந்தச் சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

தமிழ்நாடு அரசு அரசாணை
இதனடிப்படையில் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையினால் பல்வேறு சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் பயன்பெற்று மாணவ மாணவிகளில் கல்வி தடைப்படாமல் இருக்க வழிவகுக்கும். இந்த சீரிய நடவடிக்கையை எடுத்த மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களுக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications