தலைமைச் செயலக கட்டிடத்தில் திடீர் விரிசல்.. பதறி அடித்து வெளியே ஓடிய அலுவலர்கள்! உடனே வந்த அமைச்சர்!
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் தரையில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த கட்டிடத்தில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, 10 தளங்களை கொண்டது. அங்கு, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. சுமார் 3000 அலுவலர்கள் இங்கு பணியில் உள்ளனர். இந்த நிலையில், இன்று ஊழியர்கள் பணியில் இருந்தபோது, நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில், வேளாண்மைத் துறை சார்ந்த அலுவலகத்தில் சத்தத்துடன் டைல்ஸ்களுக்கு மத்தியில் விரிசல் ஏற்பட்டது.

இதனால் அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியேறினர். உடனே அடுத்தடுத்த தளங்களுக்கும் தகவல் பரவி, 10 தளங்களில் இருந்த ஊழியர்களும் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் விரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். டைல்ஸ்களில் மட்டுமே வெடிப்பு ஏற்பட்டுள்ளது, தள கட்டுமானத்தில் பாதிப்பு இல்லை எனவே,ஊழியர்கள் அச்சப்பட வேண்டாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
எனினும், கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதிப்படுத்த அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு விரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். அவருடன் அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, "14 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட டைல்ஸ் என்பதால் விரிசல் ஏற்பட்டுள்ளது. கட்டடம் உறுதித் தன்மையுடன் உள்ளது. உடனடியாக பொறியாளர்களை அழைத்து வந்து ஆய்வு செய்துவிட்டோம். டைல்ஸ் விரிசல் ஏற்பட்ட இடத்தில் புதிய டைல்ஸ்கள் உடனடியாக மாற்றப்படும்." எனத் தெரிவித்தார்.
கட்டிடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளே சென்று பணியாற்றலாம் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications