அந்த 2 மாநகராட்சிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் குறி! திமுகவின் முடிவு என்ன? கூட்டணி இடப்பங்கீடு குஸ்தி!
சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி முதல் வாரம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி இடப்பங்கீடு விவகாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன.
மாநகராட்சி மேயர் தேர்வு நேரடியாகவா அல்லது மறைமுகமாகவா என்பதே இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், இரண்டு மாநகராட்சிகள் அடங்கிய பட்டியலை கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் மதுரை மாநகராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திருப்பூர் மாநகராட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணிக் கட்சியான திமுகவிடம் எதிர்பார்க்கிறதாம்.

திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட விரும்புகிறது. தலா 10 நகராட்சிகள் வீதம் பட்டியல் தயார் செய்து வைத்துள்ள அக்கட்சிகள் 2 மாநகராட்சிகளையும் குறி வைத்து காய் நகர்த்தத் தொடங்கியிருக்கிறது. அதன்படி மதுரை மற்றும் திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிகளில் தோழர் ஒருவரை அமர்த்த அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் ஐடியா வகுத்து வருகிறார்களாம்.

2 ஊர்கள்
திருப்பூர் மற்றும் மதுரை ஆகிய மக்களவை தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மீண்டும் அந்தக் கட்சிகளுக்கே அங்கு சீட் ஒதுக்கப்பட்டால் அது திமுக உள்ளூர் நிர்வாகிகளுக்கு சோர்வையும், சலிப்பையும் தரக்கூடும் எனக்கருதும் திமுக தலைமை இவ்விவகாரத்தில் ஆழ்ந்த அமைதிகாக்கிறது. மேலும், மேயர் தேர்தலை மறைமுக முறையில் நடத்துவதும் குறித்தும் ஒருபக்கம் ஆலோசனை ஓடிக்கொண்டிருக்கிறது.

திமுக நிர்வாகிகள்
திருப்பூரில் என்ன நிலையோ தெரியவில்லை ஆனால் மதுரை மாநகராட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என கோரஸாக தலைமைக்கு கோரிக்கை வைக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள் தூங்காநகரத்து உடன்பிறப்புகள். ஏற்கனவே இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவிடம் அவர்கள் முறையிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

திமுக முடிவு?
கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கவுள்ள திமுக தலைமை அந்தக் குழு மூலமே இது போன்ற பஞ்சாயத்துக்களை டீல் செய்யத் திட்டமிட்டுள்ளதாம். துரைமுருகன், நேரு, ஆ.ராசா, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, கனிமொழி, உள்ளிட்டோர் கூட்டணிக் கட்சிகளிடம் திமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications