கொரோனாவுக்கு பலியான மருத்துவர்.. "மனைவிக்கு அரசுப் பணி.." அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கொரோனாவுக்கு பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.விவேகானந்தன். மருத்துவரான இவர், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், 2020-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி மரணம் அடைந்தார். அந்தக் காலக்கட்டத்தில், கொரோனாவுக்கு பலியான முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில், அரசு அறிவித்த ரூ.25 லட்சம் நிவாரணத்தொகை தனக்கு வழங்கப்படவில்லை என்றும், இரு குழந்தைகளுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருவதால், பொறியியல் பட்டதாரியான தனக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரியும் மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "மனுதாரரின் விண்ணப்பம் சீனியாரிட்டி அடிப்படையில் பரிசீலிக்கப்படும்" என அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை சீனியாரிட்டி அடிப்படையில் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட்டார். விண்ணப்பம் சீனியாரிட்டி அடிப்படையில் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படாவிட்டால், மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம் என அனுமதித்து, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
குட் நியூஸ்.. உலகம் முழுக்க 90% மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி வந்துடுச்சி.. WHO சொல்றதை பாருங்க