8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் துன்புறுத்தல்? சென்னை போலீஸ் எஸ்.ஐ மீது பகீர் புகார்!
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 வயது சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். இருப்பினும் மாணவியை 3 மணி நேரத்துக்கும் மேலாக கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டில் அந்த மாணவி இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று மாணவியை உறவினர்கள் பார்த்துள்ளனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்தச் சிறுமிக்கு சப்- இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை அளித்து இருப்பதாக கூறி நேற்று நள்ளிரவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சிறுமியின் தாத்தா காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் உறவினர்கள் சிலரை போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மாலை 6 மணிக்கு பிறகு எனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. நான் மயக்கமாகி விட்டேன் எனக் கூறியிருக்கிறார். இதனால் மயக்க ஊசி செலுத்தி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்தச் சிறுமியை அவரது குடும்பத்தினர் துன்புறுத்தியதாகவும், குழந்தைகள் நல பிரிவுக்கு தொடர்பு கொண்டு சொல்லிவிடுவேன் என நான் சொன்னதால் அதற்கு பழி வாங்குவதற்காகவே என் மீது பொய் குற்றச்சாட்டு சொல்கிறார்கள் என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications