யாதவர்களை இழிவுபடுத்தினாரா சீமான்? ”நடவடிக்கை தேவை” காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
சென்னை: யாதவ சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிரடியாக கருத்துக்களை எடுத்து வைப்பார்.
பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளை அதிகமாக விமர்சிக்கும் சீமான், சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சர்ச்சை என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார். இவருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து மதுரையில் பேசிய சீமான், முலாயம் சிங் யாதவ் உயிரிழப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்த கோனார் இடையர்கள் உள்ளிட்டவர் எதற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

போலீசில் புகார்
கடந்த வாரம் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய சீமான், யாதவ சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து யாதவ சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .

வழக்கறிஞர் பேட்டி
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் சீமான் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க கோரி யாதவ அமைப்புகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் காசிராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், உத்திரப் பிரதேசத்தில் கடந்த வாரம் உயிரிழந்த முலாயம் சிங் யாதவ் உயிரிழந்த நிலையில் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சட்ட நடவடிக்கை தேவை
இதனை கொச்சைப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழகத்தில் இருக்கக்கூடிய கோனார், இடையர் உள்ளிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தக்கூடிய வகையிலும், முலாயம் சிங் யாதவ் உயிரிழப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்த கோனார் இடையர்கள் உள்ளிட்டவர் எதற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என பேசியும் இழிவான கருத்துக்களை தெரிவித்தார். இதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications