பரபரப்பு.. உதயநிதி ஸ்டாலின் "எய்ம்ஸ்" செங்கலை திருடிவிட்டார்.. போலீசுக்கு போன பாஜகவினர்..!
சென்னை: திமுகவின் உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை திருடி விட்டதாக போலீசில் புகார் தரப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தாமதமாவது குறித்து பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.. மற்றவர்களை போல சீரியஸாக விவாதிக்காமல், குற்றம் சொல்லாமல், உதயநிதி மட்டும் இந்த விஷயத்தில் புது தினுசாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
எங்கெல்லாம் பிரச்சாரத்துக்கு செல்கிறாரோ அங்கெல்லாம் ஒரு செங்கல்லை கையோடு எடுத்து போகிறார்.. அதுவும் ஒரே ஒரு செங்கல்லை கொண்டு போகிறார்.. பொதுமக்களிடம் பேசி கொண்டே இருப்பவர், திடீரென இந்த ஒத்த செங்கல்லை தூக்கி காட்டுகிறார்.. எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டாமல் பாஜக ஏமாற்றி விட்டதுன்னு ரொம்ப சிம்பிளா இதன்மூலம் மக்களுக்கு புரிய வைத்து வருகிறார்.

பாஜக
"3 வருஷத்துக்கு முன்னாடி, அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை கட்டி தந்தாங்களே, உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அதை கையோடு எடுத்து வந்துவிட்டேன்... அதுதான் இது" என்று செங்கல்லை தூக்கி காட்டுகிறார். உதயநிதியின் இந்த அதிரடியை பாஜகவே எதிர்பார்க்கவில்லை.. அதிமுகவும் அதற்கு மேல் எதிர்பார்க்கவில்லை.. நல்லா புரியும்படியாக, தெளிவாக, சிம்பிளா, எதார்த்தமாக பேசிவருகிறார்..

பிரச்சாரம்
அதனால்தான் இந்த "செங்கல் டேக்டிக்ஸ்"அவருக்கு நிறைய கைகொடுத்து வருகிறது. உதயநிதி இப்படி செங்கல்லை எடுத்து காட்டி பிரச்சாரம் செய்யும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியது.. இதையடுத்து, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் என்பவர் கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து அளித்த புகாரில் கூறியதாவது:

மோடி
"மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் கடந்த 27.01.2019ம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்து. அதனைத் தொடர்ந்து கடந்த 01.012.2020ம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ்மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு
இந்நிலையில் சொத்தின் பாதுகாப்பிற்க்காக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்க்குள் இருந்து செங்கலை திமுக-வின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடி கொண்டு வந்துள்ளார். இந்த உண்மையை அவரே நேற்று (25.03.2021) விளாத்திக்குளம் பேருந்து நிலையத்திற்கு முன்பு நடைபெற்ற பிராச்சார கூட்டத்தில் ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தான் திருடி கொண்டு வந்த அந்த செங்கலையும் அங்கே கூடியிருந்த பொது மக்களிடத்தில் எடுத்து காண்பித்துள்ளார்.

புகார்
அவரின் இத்தகைய செயல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு380ன் படி தண்டிக்க தக்க குற்றச் செயலாகும். ஆகவே சமூகம் காவல் ஆய்வாளர் அவர்கள் இப்புகார் மனு மீது விசாரணை செய்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் வளாகத்திற்க்குள்ளிருந்து செங்கலை திருடிக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அதனை விளாத்திக்குளத்தில் வைத்து ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் திருடி வந்த செங்கலை கைபற்றி சட்டப்படிதண்டனை பெற்று தந்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.