தண்ணீர் பிச்சை.. நடிகை தான்யாவிற்கு எதிராக புகார்.. லால் சலாம் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்
சென்னை: லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் நடித்துள்ள இந்த லால் சலாம் படத்தை வெளியிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். லால் சலாம் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்றும் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது.

லால் சலாம் திரைப்படம் வரும் 9-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.
இப்படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் தன்யாவும் கலந்து கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்யா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவின் ஸ்கீர்ன்ஷாட்டை பகிர்ந்து அவரை கடுமையாக சாடிவந்தனர்.
தான்யா தனது பதிவில், "அன்புள்ள சென்னை தண்ணீர் பிச்சை கேட்டீர்கள் நாங்கள் கொடுத்தோம் அதைப்போல மின்சாரம் கேட்டீர்கள் கொடுக்கிறோம், எங்களுடைய அழகான பெங்களூருவை கொச்சைபடுத்துனீர்கள் அத்தனையும் தாங்கிக்கொண்டோம். இப்படி கெஞ்சிக்கொண்டே இருக்கிறாய் நாங்களும் கொடுக்கிறோம். டேய் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என கூறியிருந்தார். அது மட்டுமின்றி இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் எனவும் கூறியிருந்தார்.

2012ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது ஆர்சிபி அணிக்கு ஆதரவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாடி அவர் போட்ட பதிவு இது. அப்போதே அவரது இந்த கருத்துக்கு கடுமையான எதிர்வினை கிளம்பியது. அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமா வாய்ப்புகளும் பெரிதாக கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், தற்போது 'லால் சலாம்' படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை வழங்கியிருப்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நெட்டிசன்கள் பலரும் கடந்த சில நாட்களாகவே அவரை தீட்டி தீர்த்து வருகிறார்கள். இதனையடுத்து, தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் லால் சலாம் கதாநாயகி தன்யா பாலகிருஷ்ணன் முன்னதாக பேசியது வைத்து சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் தன்யா, ரஜினி மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் லைக்கா மீதும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில்புகார் அளித்துள்ளார்.
புகாரில் " லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் நடித்துள்ள இந்த லால் சலாம் படத்தை வெளியிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் . எனவே படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications