அவசர காலத்தில் கழுத்தறுத்த அபாய சங்கிலி! கொல்லம் ரயிலில் ’கடைசி’ பயணம்.. கருவுடன் பலியான கர்ப்பிணி!
சென்னை: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண் பலியான நிலையில், அவசர காலத்தில் வேலை செய்ய வேண்டிய அபாய சங்கிலி செயல்படாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தென்காசி அருகே உள்ள மேல்நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இவர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில் கஸ்தூரி தனது குடும்பத்தினருடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
கர்ப்பிணி பலி: ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ரயிலில் படிக்கட்டு பகுதிக்கு சென்று கதவு ஓரத்தில் வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் நிலை தடுமாறி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். தொடர்ந்து உறவினர்கள் மற்றும் போலீசார் 3 மணி நேரத்துக்கு பின் கஸ்தூரியை சடலமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அபாய சங்கிலி: இதனிடையே இந்த சம்பவம் நடந்த போதே கர்ப்பிணியின் உறவினர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் ரயில் நிற்கவில்லை. இதனையடுத்து அடுத்த பெட்டிக்கு சென்று ரயிலை நிறுத்துவதற்குள் 8 கிலோ மீட்டர் தள்ளி சென்று விட்டது. வாந்தி எடுப்பதற்காக கர்ப்பிணி பெண் கஸ்தூரி அருகே இருந்த வாஸ்பேஷன் சென்றுள்ளார். அப்போது வாந்தி எடுத்த போது தலைசுற்றல் ஏற்பட்டு படிக்கட்டு ஓரம் சென்று தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருடன் வந்தவர்கள் எஸ்9 பெட்டியில் இருந்த அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றுள்ளனர்.
வேலை செய்யவில்லை: ஆனால் ரயில் நிற்காததால் ஒரு சிலர் ரயிலில் இருந்து குதிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு அருகில் இருந்த பெட்டிக்குச் சென்று அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால் கர்ப்பிணி பெண் கஸ்தூரியின் உறவினர்களும் கீழே குதிப்பது தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குள்ளாக அந்த எக்ஸ்பிரஸ் ரயில் பூவனூர் ரயில் நிலையம் சென்றதாக கூறப்படுகிறது.
கோளாறு: அங்கிருந்து சிறிது தூரம் சென்று தேடிப் பார்த்தபோது கஸ்தூரி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை தொடர்ந்து ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விருத்தாச்சலத்தில் இறங்கி காவல் துறை உதவியோடு கர்ப்பிணி பெண்ணின் உடலை கண்டுபிடித்திருக்கின்றனர். கஸ்தூரி பயணம் செய்த பெட்டியில் அபாய சங்கிலி வேலை செய்யாததால் அடுத்த பெட்டிக்கு சென்று அபாய சங்கலியை இழுத்து ரயிலை நிறுத்துவதற்குள் அது சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தை கடந்து விட்டது.
விசாரணைக்கு உத்தரவு: ஒருவேளை அபாய சங்கிலி செயல்பட்டிருந்தால் கர்ப்பிணி பெண் கஸ்தூரியை உயிருடன் மீட்டிருக்கலாம் என உறவினர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தற்போது அந்த ரயில் கொல்லம் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அங்கு சென்ற உடன் அபாய சங்கிலி செயல்படாதது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும் டெக்னிக்கல் அலுவலர்கள் அந்த ரயிலில் உள்ள அபாய சங்கிலி மற்றும் அவசர நிறுத்த கருவியை சோதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாந்தி எடுப்பதற்காக கதவு பகுதிக்கு அவர் ஏன் சென்றார் என விசாரணை நடத்தவும் ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
எப்படி இயங்கும்?: அவசர காலங்களில் அபாய சங்கலியை சுமார் 7 கிலோ விசை கொண்டு இழுத்தால் மட்டுமே ரயில் நிற்கும் என கூறும் ரயில்வே அதிகாரிகள் அந்த கருவி நேரடியாக பிரேக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பதால் ஓட்டுநர் அதனை கட்டுப்படுத்த முடியாது நேரடியாகவே ரயில் நின்று விடும் எனக் கூறியிருக்கின்றனர் . இருந்தும் அருகில் உள்ள பெட்டிகளில் அபாய சங்கிலி செயல்பட்டிருக்கும் நிலையில் குறிப்பிட்ட பெட்டியில் அபாய சங்கிலி ஏன் செயல்படவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications