கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பாருக்கு... துபாயில் நடைபெற்ற இரங்கல் கூட்டம்..!
சென்னை: மறைந்த கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பாருக்காக துபாயில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இஸ்லாமிய இலக்கியக் கழகத் துணைத் தலைவராகவும், ESPN தமிழ் தொலைக்காட்சியின் ஆசிரியராகவும், சிறந்த விளையாட்டு வர்ணனையாளராகவும் திகழ்ந்த சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் கடந்த 22-ம் தேதி காலமானார்.

இவர் இறைத் தூதர் முஹம்மது, காற்று வெளியினிலே, அழைத்தார் பிரபாகரன் முதலிய நூல்களை எழுதியுள்ளார். இதேபோல் லண்டன் தமிழ் வானொலி விருது, இலங்கை அரசு விருது, உட்படப் பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் இவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான கல்லிடைக் குறிச்சி முகைதீன், 'இந்திய யூனியன் முஸ்லிம் லீக்'கின் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் லியாகத் அலி, 'தமிழ்நாடு பண்பாட்டுக் கழக'த்தின் அஷ்ரஃப் அலி, 'ஈமான் கல்ச்சுரல் அமைப்பின்' செயலாளர் ஹமீது யாசின், நஜீம், 'அமீரக திமுக' செயலளார் முஸ்தபா, 'அமீரக மறுமலர்ச்சி பேரவை' செயலாளர் பாலமுருகன், 'அமீரக விடுதலைச் சிறுத்தைகள்' கட்சித் தலைவர் அசோகன், முத்தமிழ் வளவன், 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச்' சார்ந்த அப்துல் ஹாதி, 'மனிதநேய மக்கள் கட்சி'யின் இஸ்மாயில், 'அமீரக அமமுக' நிர்வாகி அப்துர் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாத்தான் குளம் அப்துல் ஜப்பாரின் சமுதாயப் பணிகளையும்,எழுத்துப் பணியையும் நினைவு கூர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேசினர். துடிப்புமிக்க இளைஞரைப் போல் இறுதி மூச்சுள்ளவரை இயங்கியவர் ஜப்பார் என்றும் அழகுத் தமிழ் மொழியில் கிரிக்கெட் வர்ணனையில் உச்சம் தொட்டவர் எனவும் குறிப்பிட்டனர்.
நிகழ்வின் இறுதியாக அப்துல் ஜப்பாரின் மூத்த மகனும், எழுத்தாளருமான ஆசிப் மீரான் தன் தந்தை குறித்தும், தந்தையுடனான தன்னுடைய புரிதல்களைக் குறித்தும் உணர்ச்சி பெருக்குடன் பேசினார். ஜப்பார் இலங்கை வானொலியில் சிறு வயதிலேயே பணிபுரிந்ததையும், அப்போது 300 ரூபாய் இலங்கைப் பணத்தை சம்பளமாக வைத்தே தன் கல்விக்காகச் செலவழித்த தகவலையும் பகிர்ந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications