10 வருடத்தில் பெரிய சாதனை.. "நண்பர்" அரவிந்த் கெஜ்ரிவால்! பஞ்சாப் வெற்றிக்கு கமல்ஹாசன் பாராட்டு
சென்னை: பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார். மேலும், ‛‛10 ஆண்டுகளில் 2வது மாநிலத்தில் ஆட்சியை பிடித்ததற்கு பாராட்டுக்கள்''எனவும் அவர் கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி டெல்லியை மட்டும் ஆட்சி செய்து கொண்டிருந்தது. நேற்று பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. இதன்மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியை அண்டை மாநிலமான பஞ்சாப்பிலும் காலூன்ற செய்துள்ளார்.
பஞ்சாப்பில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, செல்வாக்கான சிரோன்மணி அகாலிதளம் கட்சிகள் படுதோல்வி அடைந்தன. ஆம்ஆத்மி அமோக வெற்றி பெற்றது.

பஞ்சாப் வெற்றி
அதன்படி மொத்தமுள்ள 117 சட்டசபை தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளிலும், எஸ்ஏடி 3, பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஆம்ஆத்மி 72 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையை பெற்றுள்ளது. பஞ்சாப் முதல்வராக ஆம்ஆத்மியின் பகவந்த் மான் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

மோடி வாழ்த்து
பஞ்சாப் தேர்தல் வெற்றிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், ‛‛பஞ்சாப் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துக்கள். பஞ்சாப்பில் நலத்திட்டங்கள் நிறைவேற்ற மத்தியில் இருந்து அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளிக்கிறேன்'' என தெரிவித்து இருந்தார்.

கமல் வாழ்த்து
இதன் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அவர் சேர்ந்து இருக்கும் படத்தை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில், ‛‛ஆம்ஆத்மியின் அமோக வெற்றிக்காக நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம்ஆத்மிக்கும் வாழ்த்துக்கள். கட்சி துவங்கிய 10 ஆண்டுகளில் இன்னொரு மாநிலத்தில் ஆட்சி அமைத்திருப்பது பாராட்டுக்குரியது'' என குறிப்பிட்டுள்ளார்.

கமல்-கெஜ்ரிவால் நட்பு
கமல்ஹாசனும், அரவிந்த் கெஜ்ரிவாலும் நல்ல நண்பர்கள். கெஜ்ரிவாலை போல் தமிழகத்திலும் ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்பி தான் கமல்ஹாசன் அரசியலில் குதித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துவக்க விழாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவலை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அரவிந்த் கெஜ்ரிவாலும் தமிழகம் வந்து மக்கள் நீதி மய்யம் துவக்க விழாவில் பங்கேற்றார். மேலும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவாலின் பாலிசியை கமல்ஹாசனும் தமிழகத்தில் முன்னெடுத்தார். ஆனால் சமீபத்திய சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications