குல்லா போடுங்க; நடையை கட்டுங்க; கதர்சட்டையினருக்கு கட்சி மேலிடம் விடுத்த மெசேஜ்!
சென்னை: மத்திய அரசுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு அடைய வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் கதர் குல்லா அணிந்து துண்டு பிரசுரத்தை வழங்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
சத்தியாகிரகம் எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியதோ, அதைப்போல காங்கிரஸ் கட்சியினர் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் கே.எஸ்.அழகிரி.
ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்கள் வளர்ந்து நிற்கும் நிலையில், இன்னுமும் துண்டுபிரசுரத்தை முன்வைத்து காங்கிரஸ் செய்யும் அரசியல் கைகொடுக்குமா என்பது கேள்விக்குறியே.
இது தொடர்பாக அவர் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதன் விவரம் பின்வருமாறு;

பாஜக ஆட்சி
பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வால் தவியாய் தவிக்கும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை இருமடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.

ஒரு வாரம்
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற நவம்பர் 22 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

சத்தியாகிரகம்
அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனையின்படி நடைபெறும் இப்பிரச்சாரப் பயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கதர் குல்லா அணிந்து, கையில் மூவர்ணக் கொடியையும், கண்டன பதாகைகளையும் தாங்கிக் கொண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சத்தியாகிரகம் எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியதோ, அதைப்போல காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் அமைய வேண்டும்.

அடித்தளம்
மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு தயாரிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை பொது மக்களிடையே காங்கிரஸ் கட்சியினர் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களிடையே கருத்துகளை திரட்டுவதே இந்த அறப்போராட்டத்தின் நோக்கமாகும். இந்த போராட்டம் வெற்றி பெறுவதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு தமிழகத்தில் அடித்தளமாக அமைய வேண்டும்.












Click it and Unblock the Notifications