ஏத்துக்க முடியாது..5வது வரிசையில் ராகுல்! கேபினட் அந்தஸ்து தெரியுமா? தெரியாதா? பாஜகவை விளாசிய காங்.,
சென்னை: டெல்லியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேபினெட் அமைச்சர் அந்தஸ்த்துள்ள எதிர்க் கட்சி தலைவரான ராகுல் காந்தியை திட்டமிட்டு பாஜக அவமானப்படுத்தியுள்ளதாகவும், இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று 78வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11 ஆம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.

இதில் முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்றார். 2014ஆம் ஆண்டு முதல் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற்றதால் காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கேபினட் அமைச்சர் பதவிக்கு நிகரானது என்பதால் சுதந்திர தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்வரிசையில் மத்திய அமைச்சர்களுக்கு சமமாக இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. முன்வரிசையில் மத்திய அமைச்சர்கள் அமர்ந்திருந்த நிலையில், ராகுலுக்கு கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் அதாவது ஐந்தாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கடைசி வரிசையில் ராகுல் காந்தி பின் இருக்கையில் அமர்ந்திருந்த புகைப்படமானது, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பாஜக திட்டமிட்ட அற்பத்தனமான செயல் என விமர்சனங்கள் எழுந்தது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், அவர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையை கடைசி வரிசைக்கு மாற்ற வேண்டியிருந்தது மத்திய அரசு விளக்கம் அளித்தது. இருந்தும் மோடி அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய மலிவான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நாடாளுமன்றத்தில் மக்களவையின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கின்ற திரு ராகுல் காந்தி அவர்களை தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி ஒன்றிய பா.ஜ.க. அரசு அவமதித்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கிற பாதுகாப்பு அமைச்சகம் ஒலிம்பிக் வீரர்களை கௌரவப்படுத்த அவர்களை முன் வரிசையில் அமர்த்தியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒன்றிய கேபினெட் அமைச்சர்களாக இருக்கிற ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பது கேபினெட் அமைச்சர்களுக்கு இணையான பதவியாகும். அந்த வகையில் பார்க்கும்போது கேபினெட் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகில் இடம் ஒதுக்காமல் பின் வரிசையில் இடம் ஒதுக்கியிருப்பது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும்.
அதேபோல அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு மல்லிகார்ஜூன் கார்கே அவர்களுக்கு ஐந்தாவது வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் மிகுந்த எழுச்சியோடு ஆற்றல் மிக்கவராக திரு ராகுல் காந்தி அவர்கள் செயல்படுவதை சகித்துக்கொள்ள முடியாத மோடி அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய மலிவான செயல்களில் ஈடுபட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications