கூட்டணி குறித்து குழப்பும் வகையில் பேசினால் நடவடிக்கை – காங்கிரஸ் கட்சி அதிரடி தீர்மானம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் கூட்டணி குறித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பொது வெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது [Congress].
காங்கிரஸ் தீர்மானம்
காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேர் பகுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 75 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முக்கியமாக ஆட்சி அதிகாரம் பங்கு குறித்து யாரும் பொது வெளியில் பேசக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து பொது வெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் குழப்பம் ஏற்படும் வகையில் கருத்துகள் கூறுவதை தவிர்த்திருக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறி கருத்துகள் கூறப்படுவதால் கூட்டணி கட்சிகள் இடையே இணக்கமற்ற சூழல் ஏற்படுகிறது.
அதிரடி முடிவு
கட்சியின் அறிவுறுத்தலை மீறி பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும். கட்சியின் அறிவுறுத்தலை மீறுவதால் காங்கிரஸ் நலன் பாதிக்கப்படுகிறது. எனவே கட்சியின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications