பாமகவை கோட்டை விட்டீங்களே…? திமுகவிடம் அதிருப்தியடைந்த காங்கிரஸ்
Recommended Video
சென்னை:லோக்சபா தேர்தல் கூட்டணியில் பாமகவை ஏன் சேர்க்காமல் விட்டீர்கள் என்று திமுகவிடம் காங்கிரசின் டெல்லி தலைமை அதிருப்தியை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த லோக்சபா தேர்தலில்.... தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 48 மணி நேரத்துத்துக்குள் கூட்டணிகள் முடிவாகி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அதிமுக. பாமக, பாஜக தயாராகி விட்டது.
எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகாமல் தேமுதிக அதிருப்தியில் உள்ளது. அதே நேரத்தில் திமுகவும்,காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்து... இறுதி கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அதில் கடைசி நேரத்தில் யூ டர்ன் அடித்த பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்தது.
மல்லாக்க விழுந்த மாங்கா
மல்லாக்க விழுந்த மாங்கா என்று நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு மாங்காயை வெட்டி ஊறுகாய் போட... கொஞ்சம் திணறித்தான் போயிருக்கிறது பாமக தரப்பு. அதே சமயத்தில் பாமகவை கூட்டணிக்குள் இணைக்காமல் கோட்டை விட்டது ஏன் என்று திமுகவிடம் டெல்லி காங்கிரஸ் தலைமை அதிருப்தி எழுப்பியதாக தெரிகிறது.
காங். அதிருப்தி
இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர்கள்... யாரையும் கூட்டணியில் இருந்து அவ்வளவு எளிதாக கருணாநிதி கைவிட்டுவிட மாட்டார். அது போன்ற ஆளுமையை ஸ்டாலின் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
மிகுந்த ஏமாற்றம்
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரசுக்கு கன்னியாகுமரியில் மட்டுமே 2வது இடம் கிடைத்தது. மற்ற தொகுதிகளில் மிகுந்த ஏமாற்றத்தை அக்கட்சி தந்தது. தற்போது... பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 2016ம் ஆண்டு விலகிய பாமக, மீண்டும் கைகோர்த்துள்ளது.
பாமக வாக்குகள்
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்கி போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி கிட்டவில்லை. ஆனால்... 12 தொகுதிகளில் கிட்டத்தட்ட குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளை அள்ளியது. தருமபுரியில் 2,85,000 வாக்குகளை பாமக பெற்றது.
கூட்டணியில் மைனஸ்
தற்போது அதிமுகவிடம் பாமக இணைந்துள்ளதால்... அந்த வாக்குகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கு மைனஸ் என்று காங்கிரஸ் கருதுகிறது. அவற்றை ஈடுகட்டவும்... கூட்டணியை மேலும் வலுப்படுத்தவும் காங்கிரஸ் சில யோசனைகளை திமுகவுக்கு கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
சிறுபான்மை வாக்குகள்
அதாவது.. பாஜக. அதிமுக, பாமக கூட்டணிக்கு நிச்சயமாக சிறுபான்மையினர் மட்டும் தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் கிடைக்காது. எனவே அவற்றை மொத்தமாக அறுவடை செய்யும் வகையில் முஸ்லீம் கட்சிகள், தாழ்த்தப் பட்டோருக்கு போராடும் கட்சிகள், அமைப்புகளை கூட்டணி வளையத்துக்குள் கொண்டு வருவது சிறந்த ஒன்று என்று டெல்லி ஆலோசனையில் திமுகவிடம் காங்கிரஸ் கூறியிருக்கிறது.
அடுத்தகட்ட நகர்வு
எனவே... கூட்டணி பேச்சோடு... அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளுக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அடுத்த சில நாட்களில் தமிழக அரசியல் பரபரப்பை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. ஆக... மொத்தத்தில் கூட்டணி கணக்குகள் முடிந்தபாடில்லை.