உடையுமா காங்.? கலக்கத்தில் ’கதர்’ வேட்டிகள்.. தவெகவுக்கு தாவும் ‘அவார்டு’ ஊர் எம்பி? கூடவே அவங்களா?
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ராகுல் காந்தி உடனான ஆலோசனைக்குப் பிறகு இதுவரை சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்த தலைவர்கள் அமைதியாக இருக்கின்றனர். திமுகவுடன் தான் கூட்டணி என காங்கிரஸ் தலைமை முடிவில் இருக்கும் நிலையில் பல தலைவர்கள் விலகல் முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் 'போர்வை' மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்பியும், அவார்ட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்பியும் தமிழக வெற்றிக் கழக தரப்புக்கு தாவலாம் என சொல்லப்படுகிறது.
சேர்ந்தே இருப்பது காங்கிரசும் கோஷ்டி பூசலும் என்பார்கள்.. உண்மையில் கடந்த கால வரலாற்று பார்க்கும் போது அப்படித்தான் இருக்கிறது. யாராவது ஒருவர் தலைவர் பதவிக்கு வந்தால் அதற்கு முன் தலைவர்களாக இருந்தவர்களும் அவரது ஆதரவாளர்களும் தனி தனி கோஷ்டியாக செயல்படுவது வழக்கம்.
சில ஆண்டுகள் அவர்கள் தலைவராக பணியாற்றியதும், முன்னாள் தலைவர்கள் டெல்லிக்கு சென்று அவரை மாற்ற வேண்டும் என்பார்கள். அந்த நிலைமை தான் செல்வப் பெருந்தகைக்கும் ஏற்பட்டது. திமுகவுடன் மிகுந்த நெருக்கம் காட்டுகிறார் என குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒட்டுமொத்தமாக டெல்லிக்குச் சென்று புகார் சொன்னனர் மூத்த தலைவர்களும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களும்.

தமிழ்நாடு காங்கிரஸ் குழப்பம்
அதற்குப் பிறகு அந்த விவகாரம் முடிந்து போனது. இதற்கிடையே 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக சீட்டு வேண்டும் என்ற கோரிக்கை குரல்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒலிக்க தொடங்கின. இல்லையென்றால் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேரலாம் என வெளிப்படையாகவே பேசினார் சில தலைவர்கள். அதே நேரத்தில் தற்போதைய சூழலில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி சேர்ப்பது தான் நன்மை பயக்கும் என ப.சிதம்பரம், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
காங்கிரஸ் திமுக கூட்டணி
அப்படி என்றால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர வேண்டாமா? என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற ஆஃபரை கொடுத்தது. இதனால் காங்கிரஸ் கட்சியில் சலனங்கள் எழத் தொடங்கியது. திமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என ஒரு தரப்பும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என மற்றொரு தரப்பும் கூறி வந்தது. தமிழ்நாடு தலைவர்கள் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் விஜயை ஒரு ஃபேக்டராக பேசத் தொடங்கினர்.
கூட்டணியில் குழப்பம்
டெல்லி தலைமை வரை இந்த விவாதம் தொடர்ந்தது. வெளிப்படையாக சிலர் சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கியதால், காங்கிரஸ் திமுக கூட்டணியில் குழப்பம் உண்டானது. கூட்டணி தொடர்பாக இறுதி முடிவை அறிவிக்க வேண்டுமென திமுக வலியுறுத்திய நிலையில், டெல்லியில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் எம்பிக்கள், எம்எல்ஏக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து பொதுவெளிகளில் கருத்து தெரிவிக்கக் கூடாது என காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது.
காங்கிரஸ் எம்பிகள் தாவல்
சில தலைவர்கள் தற்போதைக்கு அமைதியாக இருக்கிறார்கள். மேலும் திமுகவுடன் தான் கூட்டணி என்பதில் காங்கிரஸ் தலைமை தெளிவாக இருப்பதாக சொல்லப்படுகிறது ஏற்கனவே திமுகவினர் தங்களை மதிப்பதில்லை என புகார் சொல்லி வந்த சில எம்பிக்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம் தாவலாம் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் அவார்ட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்பியும் போர்வைக்கு பிரசித்தி பெற்ற மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்பியும் ஆத்திரத்தில் இருப்பதாகவும், அதனால்தான் அவர்கள் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றி கழகம்
தற்போதைக்கு மறைமுக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ராகுலின் பெயரைச் சொல்லி திமுகவின் ஆதரவோடு எம்பி ஆனவர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு தாவினால் விமர்சனங்களை எதிர்கொள்ள கூடும் என்பதால், தற்போதைக்கு வெளிப்படையாக எதையும் பேச முடியாது என சொன்னதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை அமைதி காப்பதே நலம் என சைலன்ட் மோடில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications