திமுக நாடகம் போடுகிறது.. பிராமணர்களுக்கு மட்டுமா 10% இடஒதுக்கீடு? கொந்தளிக்கும் அண்ணாமலை!
சென்னை: உயர் சாதிகளுக்கான 10% இட ஒதுக்கீடு பற்றி எதுவுமே தெரியாமல் தன் பிராமண எதிர்ப்பை மட்டுமே வைத்து திமுக அரசியல் செய்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், அடுத்தடுத்த நாட்களில் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வருகை தந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக கொட்டும் மழையில் கைக்குழந்தைகளோடு பெண்கள் காத்திருந்தனர்.
நாங்க அப்பாயின்மென்ட்டே கேட்கல.. எடப்பாடி துரோகின்னு அமித்ஷாவுக்கே தெரியும்.. புகழேந்தி காட்டம்!
14 லட்சம் ட்வீட்
தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு அளித்த வரவேற்பால் பாஜகவினரும் உற்சாகத்தில் உள்ளோம். வணக்கம் மோடி என்று ட்விட்டரில் 14 லட்சத்திற்கும் அதிகமான ட்வீட்கள் பகிரப்பட்டுள்ளது. இது தமிழக மக்கள் மத்தியில் பாஜகவுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை காட்டுகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷா உடனான ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பற்றியோ, கூட்டணி பற்றியோ பேசப்படவில்லை. கட்சியின் அமைப்பு ரீதியாக, வளர்ச்சி ரீதியாக மட்டுமே விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
திமுக vs பாஜக
தொடர்ந்து, திமுகவை நாங்கள் சித்தாந்த ரீதியாக மட்டுமே எதிர்க்கிறோம். கன்னியாகுமரி தொகுதி பற்றிய கோரிக்கையை பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் வைத்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஸ்டாலின் உறுதியளித்தார். அதற்காக அவரை மதுரை விமான நிலையத்தில் சந்தித்த போது நன்றி கூறினேன் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மீது விமர்சனம்
தொடர்ந்து உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கூடு விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்தியில் ஒரு நிலைப்பாடும், மாநிலத்தில் ஒரு நிலைப்பாட்டையும் காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. இதற்கு ஏன் காங்கிரஸ் கட்சி இருக்க வேண்டும். திமுகவின் பி டீம் என்று மாற்றிவிடலாம். எம்பி சீட் கொடுக்க மாட்டோம் என்று திமுக மிரட்டியதால், இந்த முடிவுக்கு காங்கிரஸ் வந்திருக்கிறது. இது வேடிக்கை என்பது மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சி பாதாளம் நோக்கி செல்கிறது என்று விமர்சித்தார்.
பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு
தொடர்ந்து, 70க்கும் மேற்பட்ட சாதிகள் 10% இடஒதுக்கீடு மூலமாக பயனடைகிறார்கள். முதலியார், செட்டியார் உள்ளிட்ட சாதிகளோடு, பிராமணர்களும் இருக்கிறார்கள். அதேபோல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். இது பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய அனைவருக்கும் பொருந்தும். 10 % இட ஒதுக்கீட்டை திமுக எதுவுமே தெரியாமல் தன் பிராமண எதிர்ப்பை மட்டுமே வைத்து அரசியல் செய்கிறது. திமுகவினர் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கிறார்கள்.
திமுகவின் நாடகம்
இந்த இடஒதுக்கீட்டை இந்திய அளவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரிக்கிறார்கள். கேரளாவில் அம்மாநிலத்திற்கு ஏற்ப அவர்கள் ஆதரிக்கிறார்கள். திமுக அதன் ஒரு சில கூட்டணி கட்சிகளை சேர்த்துகொண்டு அனைத்துக் கட்சி கூட்டம் என சொல்வது நாடகம் என்று தெரிவித்தார்.
கோவை விவகாரம்
தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை விவகாரம் குறித்து சில தகவல்களை கேட்டறிந்தார். பாஜகவின் நடவடிக்கைகளால் திமுக இரட்டை வேடம் மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அமித் ஷாவிடம் என்ஐஏ பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். என்ஐஏ அதிகாரிகளை அதிகளவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வைத்தோம் என்று தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி
தொடர்ந்து, அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, பிரதமர் மோடி மதுரை வந்தபோது எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் சந்திதார். அதேபோல் ஓபிஎஸ்-க்கும் அனுமதி வழங்கி சந்தித்தார். எங்கள் நிலைப்பாடு என்பது, நாங்கள் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம். அதற்கு தொண்டர்கள் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். அவர்களோடு எங்கள் தலைவர்கள் கூட்டணி வைப்பார்கள் என்று தெரிவித்தார்.