ராஜீவ் காந்தியை விடுங்க.. ஈழத் தமிழர்களுக்காக சீமான் என்ன செய்தார்.. கையேந்துறது யார்..? அழகிரி அட்டாக்
சென்னை: ராஜீவ் காந்தி இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம். சீமான் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன செய்தார்? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவருக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியினர் கொலையாளிகளை விடுவிடுத்ததை திருவிழாவாக கொண்டாடுவதா என அதிருப்தி தெரிவித்த நிலையில் சீமான் காங்கிரஸாரை விமர்சித்திருந்தார். அவருக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆளுநர் காலதாமதம் செய்ததால் சிறப்பு அதிகார சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
பேரறிவாளன் விடுதலையை தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரவேற்றாலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து வாயில் வெள்ளைத் துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

கண்ணீர் விடுகிறோம்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது எங்கள் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. அந்தக் கொலையாளியின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும்போது இதயத்திலிருந்து ரத்தக் கண்ணீர் வடிகிறது. எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் கதறுகிறோம். கண்ணீர் விடுகிறோம்" என வேதனை தெரிவித்தார்.

சீமான்
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தை விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் துணியை கட்டி போராட்டம் நடத்துவது நியாயம் இல்லை, மூக்கையும் சேர்த்து கட்டிக்கொண்டு போராட்டம் நடத்த வேண்டும்.
காங்கிரஸ் தமிழகத்தில் தமிழக மக்களுக்காக எந்த போராட்டமும் நடத்தவில்லை. தமிழ் மக்களுக்காக எந்த ஒரு நியாயமான செயலும் செய்யாத காங்கரஸ் கட்சி, இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமே அவர்களுக்கு சொந்தமானது எனக் கடுமையாக விமர்சித்தார்.

ராஜீவ் காந்தி
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? ரூ.400 கோடி பீரங்கி ஊழல் செய்தவர். போபால் விஷவாயு உயிரிழப்புக்கு காரணம் யார்? ஆண்டர்சனை தப்பிக்க வைத்தது யார்? ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார். ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க? நீங்கள் செய்த கொடுஞ்செயல்களை நாங்கள் மன்னிக்க தயாராக இல்லை எனக் கூறினார்.

கே.எஸ்.அழகிரி
இந்நிலையில், சீமானின் விமர்சனம் குறித்துப் பேசியுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அவர் சொல்வதுபோல முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்வோம். சீமான் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்தார்?
துடுக்குத்தனமாக பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பேசுவது வேறு விதமாக இருக்கும். சீறுவது போல வாயை திறக்கலாம். சீற்றம் வராது காற்றுதான் வரும் எனக் கூறியுள்ளார்.

அவர் சொல்லக்கூடாது
மேலும், சீமான் வேடிக்கையாக பேசுவதில் வல்லவர். அவர் பேச்சில் வேடிக்கை மட்டுமின்றி அறியாமையும், பிதற்றலும் இருக்கும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நற்சான்றிதழ் வழங்கும் உயர்ந்த இடத்தில் சீமான் இல்லை. யார் தியாகி, தியாகி இல்லை என்று அவர் சொல்லக் கூடாது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சீமான் மற்றும் காங்கிரஸார் இடையேயான இந்த நேரடி வார்த்தை மோதல் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications