நேரில் சந்திப்பு.. முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய ப.சிதம்பரம்.. பின்னணியில் வேறு ஒரு காரணமும் உள்ளதாம்!
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. திமுகவுடன் காங்கிரஸ், இருகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணி அமைத்தன. இதற்கு மதசார்பற்ற கூட்டணி என பெயரிடப்பட்டது.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு பிப்ரவரி 19ல் நடந்தது. மொத்தம் 60.7 சதவீத ஓட்டுகள் பதிவானது.

திமுக வேட்பாளர்கள் வெற்றி
தமிழகத்தில் உள்ள 268 மையங்களில் பிப்ரவரி 22ல் காலை 8 மணி முதல் ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னணியில் இருந்தனர். திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வந்தனர். காலை 11 மணி முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுகவினரும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இருகம்யூனிஸ்ட் உள்பட பல கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றனர்.

அதிமுக தோல்வி முகம்
தனித்து போட்டியிட்ட அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஓரளவுக்கு மட்டுமே அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். பல மாவட்டங்களில் அதிமுக இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்தது. 2011 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒப்பிடும்போது அதிமுக கட்சி பெரிதும் சரிவடைந்தது. இதேபோல் கூட்டணியின்றி களமிறங்கிய பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அதிமுகவின் நிலையே ஏற்பட்டது. இந்த கட்சியின் வேட்பாளர்களும் குறிப்பிட்ட வார்டுகளில் மட்டுமே வெற்றியை பதிவு செய்து வந்தனர்.

அதிக இடங்களில் திமுக
இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக 21 மாநகராட்சி, 120க்கும் அதிக நகராட்சி, 350க்கும் அதிகமான பேரூராட்சிகளை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. தற்போது இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களாக யாரை நியமிக்கலாம் என திமுகவினர் ஆலோசித்து வருகின்றனர்.

ப சிதம்பரம் வாழ்த்து
இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற முதல்வர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் இன்று முதல்வர் ஸ்டாலினை சென்னையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் சந்தித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றதற்கு அவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேநேரம், ராஜ்யசபா தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் திமுக ஆதரவோடு போட்டியிட சிதம்பரம் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அச்சாரம் இந்த சந்திப்பு என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications