மோடி கண்ணீர்.. சந்திரயான்-3 திட்ட என்ஜினியர்களுக்கு 17 மாதங்களாக சம்பளமே தரல.. காங்கிரஸ் விளாசல்!
சென்னை: சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய ஹெவி என்ஜினீயரிங் கார்ப்பரேசன் என்ஜினியர்களுக்கு 17 மாதங்களாக சம்பளம் வழங்காதது ஏன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் கடந்த 23ஆம் தேதி தரையிறங்கியது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் ஆய்வைத் தொடங்கியுள்ளது. இதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டில் இருந்து நேரடியாக நேற்று காலை பெங்களூர் வந்தார். பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்துக்குச் சென்று விஞ்ஞானிகளை கட்டியணைத்து பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.
அதன்பின்னர், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையின் கூட்ட அரங்கில் பேசிய பிரதமர் மோடி, "உங்களின் கடின உழைப்புக்கு சலாம். உங்கள் விடாமுயற்சிக்கு சலாம்" என்று கூறியபோது திடீரென உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் சிந்தினார். நிலவில் லேண்டர் தரைஇறங்கியவுடன் நாடு முழுவதும் ஆரவாரம் செய்ததை யாராலும் மறக்க முடியாது எனப் பேசினார்.
முன்னதாக, சந்திரயான் -3 தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த ராஞ்சியில் உள்ள கனரக பொறியியல் நிறுவனத்தில் 17 மாதமாக யாருக்கும் ஊதியம் வழங்கவில்லை என தகவல் வெளியானது. மத்திய கனரக தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இதில் 3,000 பேர் பணியாற்றி வருவதாகவும் ரூ. 1,000 கோடி கேட்ட நிலையில் மத்திய அரசு சம்பளம் வழங்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனைச் சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "சந்திரயான்-3 திட்ட வெற்றி: விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகிறார், பிரதமர் மோடி. சந்திரயான்-3, நிலவில் தரையிறங்கிய பெருமையும், உற்சாகமும் இன்னும் நீண்ட காலத்துக்கு நம்முடன் இருக்கும்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் தலைமை, உண்மையிலேயே வரலாறு படைத்துவிட்டது. அவருக்கும், அவருடைய குழுவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதே சமயத்தில், போலி வேடம் போடும் பிரதமர் மோடி, சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். லேண்டர் தரையிறங்கியவுடன், நீங்கள் அவசரமாக திரையில் தோன்றினீர்கள். அந்த பெருமையை தட்டிச் சென்றீர்கள்.
ஆனால், உங்கள் அரசு இஸ்ரோவுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஆதரவாக இருக்க மறுப்பது ஏன்? சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய ஹெவி என்ஜினீயரிங் கார்ப்பரேசன் என்ஜினீயர்களுக்கு 17 மாதங்களாக சம்பளம் வழங்காதது ஏன்? இதுபோன்ற முக்கியமான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 32 சதவீதம் குறைத்தது ஏன்?
உலகத்தரம் வாய்ந்த விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை அவர்கள் நடத்தி வந்த போதிலும், அவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பை நீங்கள் மதிக்கவில்லை. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், விஞ்ஞானிகளின் சாதனையில் நீங்கள் புகழ் தேடுகிறீர்கள்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார் செல்வப்பெருந்தகை.












Click it and Unblock the Notifications