கர்நாடக மண்ணில் தாமரை கருகுது சாரே..அதை பாருங்க..பாஜக சிடி ரவிக்கு பொளேர் பதில் விட்ட காங். ஜோதிமணி!
சென்னை: புனித திருவள்ளுவர் மண்ணில் (தமிழ்நாட்டில்) தாமரை மலரும் என சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட பாஜக மூத்த தலைவர் சி.டி.ரவிக்கு சட்டென கடும் பதிலடி தந்துள்ளார் தமிழ்நாடு கரூர் லோக்சபா தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இருந்த ஆகப் பெரும் நம்பிக்கை அண்ணா திமுகதான். அதிமுக கூட்டணி தயவில் சில லோக்சபா தொகுதிகளில் வெல்வோம் என மனப்பால் குடித்தது பாஜக.

கூட்டணி முறிவு: ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் இடைவிடாத விமர்சனங்களால் ஆத்திரமும் அதிருப்தியும் அடைந்தது அண்ணா திமுக. இதனால் ஒட்டுமொத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறுவது என தீர்மானித்து முடிவை அறிவித்துவிட்டது அதிமுக. ஆனாலும் பாஜக- அதிமுக கூட்டணி தொடரலாம் என கூறப்பட்டு வருகிறது.
திட்டவட்டமான முடிவு: இந்நிலையில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல 2026 சட்டசபை தேர்தலிலும் கூட பாஜகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது.. அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமையும் என திட்டவட்டமாக தெரிவித்தார். இது பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
ஆறுதலடையுடம் கூட்டணி தலைவர்கள்: அதேநேரத்தில் அதிமுக- பாஜக கூட்டணி கட்சிகளோ, இல்லை இல்லை.. டெல்லி அதிமுகவுடன் பேசுகிறது. பாஜக தலைவர்கள், அதிமுக தலைவர்களை சமாதானப்படுத்துகிறார்கள்.. எல்லாம் நல்லதே நடக்கும் என ஆறுதலாக பேசி வருகின்றனர்.

சிடி ரவி ட்விட்டர் பதிவு: இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாஜகவுக்கான மாஜி மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி (கர்நாடகா) தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புனித திருவள்ளுவரின் மண்ணில் *(தமிழ்நாட்டில்) தாமரை பெரிய அளவில் மலர்ந்தே தீரும் என எழுதியிருந்தார் சிடி ரவி.
ஜோதிமணி பதிலடி: சிடி ரவியின் இந்த பதிவுக்கு தமிழ்நாடு கரூர் லோக்சபா தொகுதி எம்.பி. ஜோதிமணி சட்டென பதிலடி கொடுத்துள்ளார். ஜோதிமணி எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், கர்நாடக மண்ணில் தாமரை கருகிக்கொண்டிருக்கிறது முதலில் அதைக் கவனியுங்கள்! தமிழக மண்ணில் தாமரை மலராமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு! என பதிலடி தந்துள்ளார்.











Click it and Unblock the Notifications