நீட் பிஜி தேர்வை ஒத்திவைங்க! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
சென்னை: முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது.
இளங்கலை மருத்துவம் படித்துவிட்டு முதுகலை மருத்துவம் படிக்க விரும்புவோருக்கு நீட் பிஜி தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டது.
குறிப்பாக யுஜி நீட் தேர்வுக்கு தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதனால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

மே மாதம் நீட் பிஜி தேர்வு
இந்த நிலையில், இந்த ஆண்டு இளங்கலை நீட் தேர்வு வருகிற ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதேபோல் முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தி இளங்கலை மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதினர்.

கார்த்தி சிதம்பரம்
இதனிடையே சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முதுகலை நீட் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், "நான் ஆயிரக்கணக்கான இளம் மருத்துவர்களுக்கு ஆதரவாக இக்கடிதத்தை எழுதுகிறேன். அவர்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஓய்வின்றி உழைத்திருக்கிறார்கள்.

எதிர்காலம் கேள்விக்குறி
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முதுகலை நீட் தேர்வு காரணமாக அவர்களின் எதிர்காலத்துக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இப்போது அறிவிக்கப்பட்ட தேதியில் அவர்களால் நீட் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக அவர்களுக்கு இன்னும் ஓராண்டு பயிற்சி காலம் நிறையவடையவில்லை. இது அவர்களின் தவறு கிடையாது.

நீட் மேற்படிப்பு கலந்தாய்வு
அதேபோல, 2021 ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து இந்திய கலந்தாய்வும் 2022 முதுகலை நீட் தேர்வும் ஒரே நேரத்தில் நடப்பது நடுத்தர மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாதிக்கும். இந்த மாணவர்கள் ஏற்கனவே கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் பல்வேறு தேர்வுகளை எழுதி இருக்கின்றனர். அரசு அதிகாரிகள் அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை தரக்கூடாது.

தேர்வை தள்ளிவைக்க வேண்டும்
முதுகலை நீட் தேர்வுக்கு தயாராகி வரும் இளம் மருத்துவர்களை ஒழுங்காக நடத்தி தேர்வு தேதியை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். அதேபோல் , 2021 ஆம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து இந்திய கலந்தாய்வு நடைபெறும் நாளுக்கும் 2022 முதுகலை நீட் தேர்வு நடக்கும் நாட்களுக்கும் இடையே போதிய இடைவெளியை வழங்க வேண்டும்." என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications