பாஜகவில் சேருவது புதை குழியில் விழுவதற்கு சமம்! விஜயதாரணி மீது நடவடிக்கை.. மாணிக்கம் தாகூர் எம்பி!
சென்னை: பாஜகவில் விஜயதரணி இணைந்து புதை குழியில் விழுவதற்கு சமம் என காங்கிரஸ் கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி. இவர் அண்மைக்காலமாக காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி பாஜக அலுவலகத்திற்கு சென்ற அவர் மத்திய இணையமைச்சர் எல். முருகன் முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.

அவர் அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களால் நான் அக்கட்சியிலிருந்து விலக முடிவு செய்தேன். பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது.
இது அரசியலில் பெண்கள் தேவையான ஒன்று. அது போல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டையும் பெற்று தரவுள்ளது. தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு விஜயதாரணி தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை: இந்த நிலையில் இதுகுறித்து செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது: விஜயதாரணி எங்கிருந்தாலும் வாழ்க. ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, விஜயதாரணி மீது கருணை வைத்து 3 முறை சட்டசபை உறுப்பினராக்கினார்.
காங்கிரஸ் கட்சி விஜயதாரணிக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. அவர் கட்சி பணியாற்றவில்லை என்றாலும் அவரை பெருமையுடன் நடத்தினோம். ஆனால் இந்த முடிவு என்பது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவு. என்னுடைய பார்வை என்னவென்றால் அவர் மீண்டும் காங்கிரஸுக்கு வருவார்.
ஏனென்றால் அங்கு சென்றவர்கள் எல்லாம் யாருமே மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரியும். இந்த தேசத்தை பாதுகாக்கிற வேளையில் விஜயதாரணி இப்படி கட்சி மாறியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். எது எப்படியோ ஆல் தி பெஸ்ட் எங்கிருந்தாலும் வாழ்க என தெரிவித்துள்ளார்.
விஜய் வசந்த்: விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளது குறித்து கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் ட்வீட் செய்துள்ளார். அதில், திருமதி. விஜயதரணி அவர்கள் மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என கூறி உள்ளார்.
மாணிக்கம் தாகூர்: அது போல் விஜயதாரணி காங்கிரஸில் இணைந்தது குறித்து எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது: விஜயதாரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜகவில் விஜயதாரணி இணைந்தது புதை குழியில் விழுவதற்கு சமம். இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications