சென்னையில்‘தலை’யை சந்திக்கும் ராகுல்.. கூட்டணி சர்ச்சை.. டெல்லியில் மீட் நடக்கல.. பரபர அரசியல் களம்!
சென்னை : செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.
Recommended Video
நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு தான் நடைபெற உள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை பாஜக ஏற்கனவே தீவிரமாகத் தொடங்கிவிட்டது.
நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே முக்கிய முடிவுகளை எடுக்கிறது ஆளும் பாஜக. காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் மக்கள் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகம் வரும் ராகுல் காந்தி 7ஆம் தேதி இரவு கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தமிழகத்தில் 4 நாட்களில் 59 கி.மீ தொலைவுக்கு நடக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்து வருகிறது.

காங்கிரஸ் முயற்சி
2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும் காங்கிரஸ் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலக் கட்சிகளுடன், காங்கிரஸ் தனது உறவைப் பலப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உதய்பூரில் உதித்த திட்டம்
கடந்த மே மாத இறுதியில் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அகில இந்திய யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, இந்த யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ளார். தேர்தலைக் குறிவைத்து 150 நாட்கள் யாத்திரை நடத்தி மக்களைச் சந்திக்க இருக்கிறார் ராகுல்.

150 நாள் பாத யாத்திரை
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்களுக்கு பாத யாத்திரை மேற்கொள்ள உள்ள ராகுல்காந்தி அந்த பயணத்தை வரும் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறார். தமிழகத்தில் 4 நாட்களில் 59 கி.மீ பாத யாத்திரை செல்கிறார் ராகுல் காந்தி. மத்திய பாஜக அரசுக்கு எதிரான அலையை மக்களிடையே உருவாக்கும் நோக்கத்துடன் ராகுல்காந்தி இந்த பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளார்.

ஸ்டாலினுடன் சந்திப்பு?
பாத யாத்திரைக்காக வரும் 7ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வரும் ராகுல் காந்தி, சென்னையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வியூகம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி
திமுக அரசு பிரதமர் மோடி மற்றும் பாஜகவுடன் இணக்கமாகச் செல்வதாக ஒரு பேச்சு எழுந்த நிலையில், புதிய கூட்டணி அமையுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் இடையேயான இந்த மீட்டிங் எதிர்பார்ப்புகளைக் கிளப்பி இருக்கிறது.

டெல்லியில் சந்திக்கவில்லை
சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரைச் சந்தித்தார். இந்த முறை சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் சந்திக்கவில்லை.

கூட்டணி கட்சித் தலைவர்கள்
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு வரும் ராகுல், முதல்வர் ஸ்டாலினை உறுதியாகச் சந்திப்பார் என்கிறது காங்கிரஸ் வட்டாரம். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்துவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications