"பாஜக அடுத்த பிளான் இதுதான்.. ரங்கசாமி கட்சியை உடைக்கப் போகிறார்கள்!" பற்ற வைக்கும் நாராயணசாமி!
சென்னை: புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாஜக மீது சில பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு தமிழ்நாட்டுடன் இணைந்து புதுச்சேரியிலும் தேர்தல் நடத்தப்பட்டது. 30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபையில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இருப்பினும், 10 இடங்களில் வென்ற ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் , சில சுயேச்சைகள் மற்றும் 6 இடங்களில் வென்ற பாஜக உடன் இணைந்து ஆட்சியை அமைத்தார்.
'அதிகரிக்கும் கொரோனா'. . பரிசோதனையை அதிகப்படுத்துங்க. . 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்!
நாராயணசாமி
இருப்பினும், அவ்வப்போது அங்கு பாஜகவுக்கும் ஆளும் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசல்கள் நிலவுவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் நடைபெற்ற 5ஜி ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் புதுச்சேரி முன்னாள் முதல்வருமான நாராயணசாமி, பாஜக மீது சில பரபர குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
5ஜி அலைக்கற்றை ஏலம்
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசு சமீபத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் விட்டது. அதில் இருந்து மத்திய அரசுக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், மீதமுள்ள 3 லட்சம் கோடி ரூபாய் ஏன் அரசுக்கு வரவில்லை. பிரதமர் மோடி இதற்கு என்ன சொல்லப் போகிறார். இதில் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகச் சிலர் கூறுகின்றனர்.
ஒப்புதல் இல்லை
பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தத் தயாரா? 5ஜி அலைக்கற்றை ஏலம் விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு சிபிஐ விசாரணையைத் தொடங்க வேண்டும். இந்த ஆண்டு புதுச்சேரி மாநில திட்டக்குழுக் கூட்டம் முடிந்து ரூ.11 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் போடத் திட்டமிடப்பட்டது. இதற்கான கோப்புகள் மத்திய அரசுக்குக் கடந்த மாதமே அனுப்பப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின்னர் இன்னும் கூட மத்திய அரசு பட்ஜெட் கோப்புக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
காட்சி மாறவில்லை
மத்திய அரசு இன்னும் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் வரும் 10ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி எப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில் கூட பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க மத்திய பாஜக அரசு காலதாமதம் செய்தது. இப்போது பாஜக கூட்டணியில் ரங்கசாமி ஆட்சி நடத்தும் நிலையில், இப்போதும் அதே நிலை தொடர்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
பீகார் போல
மத்திய அரசுடன் ரங்கசாமி இணக்கமாக உள்ளார். இதைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் இருந்து அவரால் புதுச்சேரிக்குக் கூடுதல் நிதியைப் பெற முடியுமா? புதுச்சேரி வளர்ச்சிக்காக இதை ரங்கசாமி செய்வாரா? இப்போது பீகார் மாநிலத்தில் ஆர்ஜேடி கட்சியை உடைத்து ஆட்சி அமைக்கும் வேலைகளில் பாஜக ஈடுபட்டு உள்ளது.
கட்சியை உடைப்பார்கள்
அதேபோல புதுச்சேரியிலும் ரங்கசாமி கட்சியை உடைத்து பாஜக ஆட்சி அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. மோடியும், அமீஷாவும் சேர்ந்து ரங்கசாமியை வீட்டுக்கு அனுப்பும் காலம் விரைவில் வரும். பாஜக எப்போதுமே கூட்டணிக் கட்சியைக் குழிதோண்டிப் புதைக்கும் வேலையைத் தான் செய்கிறது. புதுச்சேரி மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. இங்கும் அது விரைவில் தொடங்கும்" என்று அவர் தெரிவித்தார்.