திமுக கூட்டணி வேண்டாம்.. சென்னையில் ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர் கிழிப்பு.. வாசகத்தை கவனிச்சீங்களா
சென்னை: தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தமிழகம் வந்துள்ளார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் காங்கிரஸ் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஆட்சியில் பங்குகோரி சென்னையில் காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்டது.
இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும். அதுமட்டுமின்றி ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

ஸ்டாலின் மறுப்பு
இதனை திமுக விரும்பவில்லை. கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்துக்கு ஒத்து வராது என்று முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டார். ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று விரும்பும் திமுக, தனது கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் வழங்கவும் தயங்குகிறது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சுவரொட்டிகள்
இதற்கிடையே தான் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தமிழகம் வந்துள்ளார். சென்னை முகப்பேரில் கேசி வேணுகோபால் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் அருகே காங்கிரஸ் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
காங்கிரஸ் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் ராகுல் காந்தியின் போட்டோ இடம் பெற்றிருந்தது. அதில், ‛அதிகாரமற்ற அரசியல்.. அர்த்தமற்ற அரசியல்.. வேண்டும்! வேண்டும்! ஆட்சிஅதிகாரத்தில் பங்கு வேண்டும். பங்கு தரும் கட்சி உடனே கூட்டணி வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.
சுயமரியாதையின்றி கூட்டணி வேண்டாம்
அதுமட்டுமின்றி ‛அகில இந்திய தலைமையே.. புரிந்து கொள்! புரிந்து கொள்! ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் கட்சி உடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறோம் என்பதை புரிந்து கொள். வேண்டாம்.. வேண்டாம்.. சுயமரியாதையை இழந்து கூட்டணி வேண்டாம்' என்று கூறப்பட்டு இருந்தது.
போஸ்டர்கள் கிழிப்பு
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது என்று திமுக கூறியுள்ளதால் அந்த கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது கிழிக்கப்பட்டுள்ளது. அதனை யார் கிழித்தார்கள்? என்பது தெரியவில்லை.
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்கனவே இருக்கும் பிரச்சனைக்கு நடுவே நடந்துள்ள இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை பற்றவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications