அலை அலையாய் வாரீர்! தமிழகமெங்கும் ஜூன் 27-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! தமிழக காங்கிரஸ் அழைப்பு!
சென்னை: தமிழகம் முழுவதும் ஜூன் 27-ஆம் தேதி அன்று அக்னி பாத் திட்டத்தை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
அக்னி பாத் திட்டம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆகிய நிலையில், இவ்வளவு சீக்கிரமாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்களே என தமிழக காங்கிரஸ் கமிட்டியை நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் காங்கிரஸ் நடத்தும் ஆர்ப்பாட்டமானது மத்திய அரசு பயப்படும் வகையில் இருக்க வேண்டும் என கட்சியினருக்கு அறைகூவல் விடுத்துள்ளார் அழகிரி.
அக்னி பாத்
இந்திய ராணுவ பணிகளுக்கு ஆள் சேர்ப்பதில் நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளுக்கு பதிலாக அக்னி பாத் என்ற புதிய திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ரயில்வே உள்ளிட்ட பொதுச் சொத்துகளை நாசப்படுத்துகிற வகையில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதனால், முன்னூறுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கே.எஸ். அழகிரி
இந்தப் போராட்டங்கள் அனைத்தும் இளைஞர்களே முன்னின்று தன்னெழுச்சியாக நடத்தியவையாகும். இதனிடையே காங்கிரஸ் கட்சியினரும் அக்னி பாத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பிறகு, அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கே.எஸ்.அழகிரி. அதில் அவர் கூறியுள்ளதாவது, '' 6 மாத ராணுவ ஆயுதப் பயிற்சி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வேலையை விட்டு வெளியேறுகிற போது, மாற்று வேலைக்கு தகுதியற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். இத்தகைய இளைஞர்கள் நிரந்தர வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சூழலில் தீவிரவாதம், பயங்கரவாதக் குழுக்களின் வலையில் சிக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது.''
விஷப் பரீட்சை
''ஆயுத பயிற்சி பெற்ற இளைஞர்கள் தவறான வழியில் அழைத்துச் செல்லப்படுவார்களேயானால், அதைவிட பேராபத்து இந்த நாட்டிற்கு வேறு எதுவும் இருக்க முடியாது. இதுகுறித்து மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை. அக்னிபத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு இன்றைய இளைஞர்களை விஷப் பரிட்சைக்கு ஆளாக்கியிருக்கிறது. அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டுமென்று தலைவர் ராகுல்காந்தி அரைகூவல் விடுத்திருக்கிறார்.''
ஜூன் 27-ல் ஆர்ப்பாட்டம்
''இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வருகிற ஜூன் 27 திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.''