கச்சத்தீவு தொடர்பாக பாஜக வெளியிட்ட ஆர்டிஐ ஆவணங்கள் போலி.. காங்கிரஸ் பரபர குற்றச்சாட்டு!
சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்டதாக பாஜக வெளியிட்ட ஆவணங்கள் போலியாக இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதற்கு முன்னதாக, பாஜக ஒரு முக்கிய பிரச்சனையை கையில் எடுத்தது. கச்சத்தீவு இலங்கை வசம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பாக ஆர்டிஐ தகவல்களை சுட்டிக்காட்டி அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1974ஆம் ஆண்டு இலங்கை வசம் ஒப்படைத்தது. ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்து வந்த கச்சத்தீவு, இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதன் பின்னணி குறித்து ஆர்.டி.ஐ தகவல் ஒன்றை வெளியிட்டார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
1961ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகக் கூறியதாகவும் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ தகவலில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கொழும்புவில் 1973ஆம் ஆண்டு நடந்த வெளியுறவுத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தர முடிவெடுக்கப்பட்டதாகவும், அதற்கு அடுத்த ஆண்டில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியிடம் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு, உடனடியாக ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ தகவல்களை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, கச்சீத்தீவை காங்கிரஸ் அலட்சியத்துடன் தாரை வார்த்தது அம்பலமாகியுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மக்களவைத் தேர்தல் சமயத்தில் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்றதாக கச்சத்தீவு பற்றிய தகவல்களை வெளியிட்டதையும், உடனே அதுகுறித்து பிரதமர் கருத்து தெரிவித்ததையும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் விஜிலென்ஸ் பிரிவில் அண்டர் செகரட்டரி பதவிகள் குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அஜய் ஜெயின் என்ற பெயரில் வெளியுறவுத் துறையில் அதிகாரி இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அதாவது, பாஜக தரப்பு கோரிய ஆர்.டி.ஐ தகவல்களை வெளியிட வெளியுறவுத் துறையின் உயர் அதிகாரியான அஜய் ஜெயின் என்ற பெயரில் தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படி ஒருவர் உயர் பொறுப்பில் இல்லை என்பதாக தற்போது மற்றொரு ஆர்.டி.ஐ தகவல் மூலமாக தெரியவந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது.
கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட விவகாரத்தில் ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்டதாக பாஜக வெளியிட்ட ஆவணங்களில் அஜய் ஜெயின் என்பவர் கையெழுத்திட்டிருந்த நிலையில், அப்படி ஓர் அதிகாரியே வெளியுறவுத் துறையில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதால் பாஜக வெளியிட்ட ஆர்.டி.ஐ தகவல் போலியாக இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "வெளியுறவுத் துறையின் செயலர் என அஜய் ஜெயின் என்பவர் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் அவர் அந்த துறையிலேயே இல்லை. எப்படி இதுபோன்ற ஒரு திருட்டுத்தனத்தைச் செய்யலாம்?
இது பற்றி பிரதமர் மோடி ட்வீட் போட்டார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். பிரதமர் மோடியும், பாஜகவும் உண்மைக்குப் புறம்பான தகவலை இட்டுக்கட்டி மக்களை திசை திருப்புகிறார்கள். எந்த விஷயத்திலும் பாஜக பேசுவது உண்மை இல்லை என்பது இந்த ஒரு விஷயத்திலேயே உறுதியாகியுள்ளது.
பாஜக ஆர்டிஐ அறிக்கை எனக் கூறி வெளியிட்ட தகவலை யார் கொடுத்தது, அது உண்மையானதா? எப்படி பிரதமர் மோடி ட்வீட் செய்தார்? என்பது தொடர்பாக அறிய நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். பிரதமரே, வெளியுறவு அமைச்சரே மோசடி செய்யலாமா?" எனத் தெரிவித்துள்ளார் செல்வப்பெருந்தகை.












Click it and Unblock the Notifications