Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கூட்டணிக்குள் எழுந்த திடீர் ‘பஞ்சாயத்து’.. சங்கடங்களை தீர்க்க முன்னே வரும் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சால், திமுக கூட்டணிக்குள் சலசலப்புகள் எழுந்துள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையேயான சங்கடங்களை தீர்க்க காங்கிரஸ் பங்காற்றும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஐஎம் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் பேசியது திமுக கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது.

dmk k balakrishnan congress

கே.பாலகிருஷ்ணன் பேச்சால் சலசலப்பு

கே. பாலகிருஷ்ணன், அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலினை சாடியிருந்தார். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும். சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைக்கிறீர்களா? என திமுக அரசை சாடி இருந்தார்.

கே. பாலகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்றைய முரசொலி நாளேட்டில் வெளியிட்டுள்ள கட்டுரையில், தமிழ்நாட்டில் அவசர நிலைப் பிரகடனமா என்று கே.பாலகிருஷ்ணன் பேசியதன் மூலம் திமுக ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போட அவர் தொடங்கி இருப்பது தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முரசொலி பதிலடி

அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா கே.பாலகிருஷ்ணன் இருக்கிறார் என்று வினவியுள்ள முரசொலி, எப்போதும் நட்போடு செயல்படும் முதலமைச்சரரை சீண்டிப் பார்க்க வேண்டும் என்ற நெருக்கடியும் நிர்பந்தமும் அவருக்கு இருக்கலாம் என்று விமர்சித்துள்ளது.

முதலமைச்சரை எப்போதும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் அவர் விழுப்புரத்தில் எதற்காக வீதியில் போய் நின்று இப்படிக் கேட்க வேண்டும்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களைப் பட்டியலிட்டு அண்மையில் தான் மார்தட்டிக் கொண்டார் பாலகிருஷ்ணன். பின்னர், அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பி?

திமுக கூட்டணியில் குழப்பம்

இந்தப் போராட்டங்களை தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது உண்மையானால் இந்தப் போராட்டங்களுக்கு அனுமதி அளித்தது எந்த முதலமைச்சர்? இவர் கேள்வி கேட்கிறாரே அதே முதலமைச்சர் தானே அனுமதியும் கொடுத்தார்? அவசர நிலைக் காலத்தில் ஒரு கட்சி இத்தனை போராட்டங்களை நடத்தி இருக்க முடியுமா? என முரசொலி பதிலடி கொடுத்துள்ளது.

சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பேச்சுக்கு திமுகவும் உடனடி எதிர்வினை ஆற்றியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கி உள்ள சூழலில், திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இந்தக் குழப்பம் பற்றி பேசியுள்ளார்.

செல்வப்பெருந்தகை கருத்து

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மூத்த அரசியல் தலைவர். மிக நீண்ட அரசியல் அனுபவம் வாய்ந்தவர். தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஆனால் ஒன்று, இந்தியா கூட்டணி எந்த காலகட்டத்திலும் மாறுபட்டு போக இடம் அளிக்கக் கூடாது. அதற்காக காங்கிரஸ் முக்கிய பங்காற்றும்.

இந்தியா கூட்டணி சிந்தாமல், சிதறாமல் 2026 சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டும். இரு கட்சிகளிடையேயும் மனமாச்சரியங்கள், சங்கடங்கள் இருந்தால் அது களையப்பட வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக அமர்ந்து பேசுவோம். அதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும்.” எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+