வெற்றுப் பேச்சுக்களைத் தவிர்த்து... உருப்படியான வேலையை பாருங்கள்.. பிரதமர் மீது காங்கிரஸ் காட்டம்..!
சென்னை: வெற்றுப் பேச்சுக்களைத் தவிர்த்துவிட்டு கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்கான உருப்படியான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கொரோனா எதிர்ப்பு போரில் படுதோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

குற்றச்சாட்டு
மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன், வெண்டிலேட்டர் பற்றாக்குறை, உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு, போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. நோயாளிகளை அழைத்து வர ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு அதிகளவில் இருப்பது ஏன் ? மருத்துவமனைகளில் இறந்து போன நோயாளிகளை மயானங்களில் எரிக்க போதிய இடவசதிகள் இல்லை.

மத்திய அரசுக்கு கேள்வி
இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு முதல் அலையில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன ? மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உற்பத்தி பெருகியதா ? குறிப்பாக, கடந்த ஆறு மாதங்களாக இரண்டாவது அலை வரும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்கொள்ள எத்தகைய கட்டமைப்பு வசதிகளையும் பிரதமர் மோடி செய்யவில்லை என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன்.

படுதோல்வி
கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி பிரதமர் மோடி பேசும்போது, 'கடந்த ஆண்டு கொரோனா எதிர்ப்பு போரில் எப்படி வெற்றி பெற்றோமோ, அதேபோல இந்த ஆண்டிலும் வெற்றி பெறுவோம்' என்று கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். முதல் அலையின்போது கொரோனாவை எதிர்த்து வெற்றி பெற்றேன் என்று கூறுகிற இவர், இரண்டாவது அலையை எதிர்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கான மக்களின் பிணக் குவியல்களைப் பார்க்கிற போது, பிரதமர் மோடி கொரோனா எதிர்ப்பு போரில் படுதோல்வி அடைந்தார் என்பதை எவரும் மறுக்க முடியாது.

உருப்படியான நடவடிக்கை
எனவே, வெற்றுப் பேச்சுக்களைத் தவிர்த்து கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு போர்க்கால நடவடிக்கையில் செயல்பட வேண்டும். அதேபோல, மத்திய, மாநில அரசுகள் கூட்டாட்சி முறைக்கு வலு சேர்க்கிற வகையில் பணியாற்றி கொரோனாவை எதிர்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications