“அந்த அம்மையாருக்கு தனியா”.. விஜயதாரணி மிஸ்ஸிங் பற்றி கிண்டலாக பதில் சொன்ன ஈவிகேஎஸ் இளங்கோவன்!
ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் வெளிப்பட்டுள்ளது.
சென்னை : கோஷ்டி பூசல்களுக்கு பெயர்போனது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி. இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்பு விழாவிலும் அந்த கோஷ்டி மோதல் வெளிப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணி இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அதுகுறித்த கேள்விக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டலாக பதில் அளித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணி பங்கேற்கவில்லை.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதி்க்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, கூட்டணி கட்சித் தலைவர்கள் தொல். திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், துரை வைகோ, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கீகாரம்
பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 20 மாத கால ஆட்சிக்கு மக்கள் அளித்து உள்ள அங்கீகாரம். கூட்டணி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி எனக்கு வெற்றியை தேடித் தந்து இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பின்படி நடந்து கொள்வேன். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற உழைப்பேன்." எனத் தெரிவித்தார்.

எல்லாரும் வந்தாச்சே
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தராதது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த இளங்கோவ்ன், "சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை இங்கே இருக்கிறார். அவர் தான் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் பிரதிநிதி. மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். கோபண்ணா பங்கேற்றார். கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத தூய தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர். என்னைப் பொறுத்தவரை எங்கள் கட்சியில் இருந்து எல்லோரும் வந்து பங்கேற்றுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

விஜயதாரணி மிஸ்ஸிங் - இளங்கோவன் விளக்கம்
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கொறடா விஜயதாரணிக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், எங்கள் கட்சியிலிருந்து எல்லோரும் வந்து கலந்துகொண்டார்கள். விஜயதாரணிக்கு தனியே அழைப்பிதழ் அனுப்பியிருக்க வேண்டும். நான் தவறு செய்துவிட்டேன். அவரை நேரில் சந்தித்து, அதற்கான வருத்தத்தைத் தெரிவிப்பேன். ஒருவேளை அடுத்த முறை பதவியேற்றால் தனியாக முதலில் அந்த அம்மையாருக்கு அழைப்பிதழ் வைத்து பதவி ஏற்பேன் எனத் தெரிவித்தார்.

சட்டமன்ற காங். தலைவர் மாற்றம்?
மேலும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப்பெருந்தகையின் பணி சிறப்பாக உள்ளதாக கூறிய அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அவரது பங்களிப்பு திருப்திகரமாக உள்ளதாகவும், மதச்சார்பற்ற தம்பிகளில் சாதி மதங்களை ஒழிக்க வேண்டும் என்ற நிலையிலே உறுதியாக இருக்கக்கூடியவர் செல்வப் பெருந்தகை, சட்டமன்ற காஙிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகையே தொடரலாம் என்றும், தனக்கு அந்த பதவிக்கு ஆசை இல்லை என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications