வல்லக்கோட்டை கோயில் கும்பாபிஷேகத்தில் செல்வப்பெருந்தகையை உள்ளே விடாதது ஏன்? திருச்சி வேலுசாமி
சென்னை: 2026 ஆம் ஆண்டு திமுக நடவடிக்கையை பொறுத்தே காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகளுடன் தோழமையுடன் நடந்து கொள்கிறதா என்பதை பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு திருச்சி வேலுசாமி அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக+ பாஜக+ தவெக கூட்டணி அமைந்தால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தின முதல்வராகவும், எடப்பாடி பழனிசாமி துணை முதல்வராகவும் இருப்பார்கள் என பீட்டர் அல்போன்ஸுற்கு எப்படி தெரியும் என எனக்கு தெரியவில்லை.
அவர் ஒரு வேளை பாஜகவின் ஆலோசகராக இருக்கிறாரோ என்னவோ! ஒரு காலத்தில் குறிப்பாக 1967 ஆம் ஆண்டு வரை கூட்டணி என்பது கொள்கை சார்ந்த, சித்தாந்தம் சார்ந்த ஒப்புக் கொள்ளக் கூடியவர்கள் மட்டும்தான் கூட்டணி என இருந்தார்கள்.
1967 ஆம் ஆண்டு முதல்முறையாக முதலாளித்துவத்தை பற்றி பேசும் சுதந்திராவும் தொழிலாளர்கள் பற்றி பேசும் கம்யூனிஸ்டும் கூட்டணி, நாத்தீகம், ஆத்தீகம் பேசுவோர் ஒரு அணி, ஆக முரண்பாடுகள் இருந்தாலும் ஒரே கூட்டணியில் இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக அது வென்றது. அதன் பின்னால் இந்த வியாதி இந்தியா முழுக்க வந்தது.
தேர்தலில் கொள்கை, சித்தாந்தம், கூட்டணி எதுவும் வேண்டாம், வெற்றி மட்டும்தான் குறிக்கோள். இன்னும் 4 மாதத்தில் எது வேண்டுமானாலும் நடக்கும், கூட்டணி எப்படி வேண்டுமானாலும் அமையும். அதை எதுவும் தவிர்க்க முடியாது. இதுதான் உண்மை, இதுதான் யதார்த்தம், இதை சொல்ல எனக்கு தயக்கம் இல்லை.
காங்கிரஸ்காரர்களை மதிக்கவில்லை என்றால் முன்னாள் முதல்வராக நேரிடும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது. கூட்டணியில் நம்பிக்கை அதை கடந்து அன்பு, பாசம், மனிதாபிமானம் இருக்க வேண்டும். பேசுவது மட்டும் 4 பேருக்கு முன்னால் நன்றாக பேசுகிறோம். ஆனால் செயல்பாடுகள் வேறு மாதிரியாக இருக்கிறது என்றால் அந்த கூட்டணி வேலைக்கு ஆகாது.
திருச்சிக்கு அருகே திருவெறும்பூர் பக்கத்தில் கூத்தபார் என்ற ஊர் உள்ளது. அந்த பஞ்சாயத்தின் துணை தலைவர் பதவிக்கு கம்யூனிஸ்ட்டை சேர்ந்த ஒருவருக்கு தருவதாக திமுக தலைமையும் கம்யூனிஸ்ட் தலைமையும் கையெழுத்து போட்டு அனுப்பிவிட்டார்கள்.
இதற்கு பஞ்சாயத்து தேர்தல் நடந்த போது அந்த உள்ளூர் திமுககாரர்கள் கட்சி தலைமையை மீறி போட்டி வேட்பாளரை நிறுத்தி, கம்யூனிஸ்ட் வேட்பாளரை தோற்கடித்தார்கள்.
தலைமையின் உத்தரவை மீறிய அந்த நபர் மீது இதுவரை திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. கூட்டணிக் கட்சிக்கு ஒரு பிரச்சினை என்றால் உடன் இருந்தால்தானே அந்த கூட்டணி நன்றாக இருக்கும். எனவே பீட்டர் அல்போன்ஸ் வேறு கூட்டணியில் யார் முதல்வர், யார் துணை முதல்வர் என கூறியதை விட திமுக கூட்டணியில் யார் முதல்வர், துணை முதல்வர் என சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
செம்பரம்பாக்கத்தை விடுங்க, செல்வப்பெருந்தகையின் தொகுதியான வல்லக்கோட்டையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எம்எல்ஏ என்ற முறையில் அவர் அங்கு சென்றார். இவரை உள்ளே விடாமல் வேறு கட்சி எம்எல்ஏக்களை உள்ளே அழைத்துச் சென்றார்கள். அது செல்வப்பெருந்தகைக்கு மட்டுமில்லை, காங்கிரஸ் கட்சியையே அவமானப்படுத்தியதாக நான் நினைக்கிறேன்.
கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என்றால் அந்த மோசமான காரியத்திற்கு காரணமான அதிகாரி யாரென்று கண்டுபிடித்து துறை ரீதியான நடவடிக்கையை திமுக அரசு எடுத்திருந்தால் கூட்டணியில் தோழமையை அவர்கள் சரியாக செயல்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.
செல்வப்பெருந்தகையை தடுத்து நிறுத்தியதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் ன்பதால் அவரை தடுத்தார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம். இப்படியிருக்கும் போது சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு பேசுவது சரியா? இதனால் கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி எழுவது இயற்கைதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications