ஒரு சிலிண்டர் 6200.. மனசாட்சி இல்லாத சிலிண்டர் ஏஜென்சிகள்.. பட்டப்பகல் கொள்ளை நடப்பது எப்படி?
சென்னை : ஒரு வணிக சிலிண்டர் விலை 5500 முதல் 6200 வரை சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கேஸ் ஏஜென்ஸிக்கள் மற்றும் டெலிவரி செய்பவர்கள் பட்டவர்த்தனமாக விற்கிறார்கள். அரசு வணிக சிலிண்டர் உற்பத்தியை 70 சதவீதமாக உயர்த்திவிட்டதாக கூறிய போதிலும், சிலிண்டர் போதிய அளவுக்கு கடைகளுக்கு போய் சேரவில்லை.. இதனை வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள. இதனை மத்திய, மாநில அரசுகள் நேரடியாக தலையிட்டு தடுக்க வேண்டும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதனால் பதிலுக்கு தாக்குதல் நடத்திய ஈரான், அத்துடன் உலக எரிபொருள் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்பட வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றி சென்ற ஆயிரக்கணக்கான கப்பல்கள் சிக்கி கொண்டன. புதிதாக எந்த கப்பலும் கச்சா எண்ணெய்யை இறக்குதி செய்ய போகவும் முடியாமல் தவிக்கின்றன.

இந்த சூழல் காரணமாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி அரசு வணிக சிலிண்டர் விநியோகத்தை முற்றிலும் தடை செயது வீட்டு சிலிண்டருக்கு அதனை மாற்றியது. எனினும் வணிகர்களின் கோரிக்கையை ஏற்று படிப்படியாக சிலிண்டர் விநியோகத்தை மத்திய அரசு அதிகப்படுத்தியது. தற்போது 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.
அதாவது 10 சிலிண்டர் தர வேண்டிய இடத்தில் ஏழு சிலிண்டர்களை அரசு தருகிறது. ஆனால் கேஸ் ஏஜென்சிகள் அந்த சிலிண்டர்களை மக்களுக்கு தருகின்றனவா என்றால், நிச்சயம் இல்லை என்கிறார்கள் வணிகர்கள்.. ஏனெனில் சிலிண்டர் 10 சதவீதம் அரசு தந்த போது கூட ஓரளவு புழக்கம் இருந்தது. ஆனால் 70 சதவீதமாக மாறிய போதும் போதிய புழக்கம் இல்லை.. ஏனெனில் சிலிண்டர் ஏஜென்சிகள் இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி பதுக்கி வைத்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக வணிகர்கள் பலர் குற்றம்சாட்டுகிறார்கள்.
வணிக சிலிண்டர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சிலிண்டர் டெலிவரி ஆகிறது.ஆனால் அதன் விலை 2200க்கு பதில் 6200 என்கிற அளவில் உள்ளதாக நேரடியாக வணிகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பெரும்பாலான வணிகர்கள் கூறும் போது, "வணிக சிலிண்டர்களை பொறுததவரை, சிலிண்டர் ஏஜென்சி நிறுவனங்கள் 5500 முதல் 6200 ரூபாய் வரை விலை வைத்து தான் விற்கிறார்கள். அந்த விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் நாங்கள். ஏனெனில் அனைத்து சிலிண்டர் ஏஜென்சிகளையும் அரசு முறைப்படுத்தி பதுக்கி விற்பனை செய்யும் டெலிவரி ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பழைய நிலையை ஏற்படுத்த வேண்டும்" இவ்வாறு கூறினார்கள்.
வீடடு சிலிண்டரை பொறுத்தவரை 45 நாட்களுக்கு பிறகே புக்கிங் செய்ய முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் சிலிண்டர் காலியான நிலையில், வீட்டு சிலிண்டர் கேட்டால் 3500 முதல் 4000 ரூபாய் வரை டெலிவரி செய்பவர்கள் கேட்கிறார்கள் என்று பொதுமக்களும் குமுறுகிறார்கள். சிலிண்டரை பதுங்கி பட்டவர்த்தமான கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்கள் மீது அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.














Click it and Unblock the Notifications