பொதுக்குழு கூட்டத்தில் பிரச்சனை செய்ய ஓபிஎஸ் சதி..டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்ட ஜெயக்குமார்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி எடப்பாடி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபி , பெஞ்சமின் ஆகியோர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது, பிரச்சனை செய்ய சமூக விரோதிகள், ஓ பன்னீர் செல்வம் தரப்பு சதி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் வரும் 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட உள்ளது. ஜூலை 11ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்குவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைப்பது உள்ளிட்ட 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் ஜூலை 11ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி எடப்பாடி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபி , பெஞ்சமின் ஆகியோர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

டிஜிபி அலுவலகத்தில் மனு
டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், 'அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது, பிரச்சனை செய்ய சமூக விரோதிகள், ஓ பன்னீர் செல்வம் தரப்பு சதி திட்டம் தீட்டியுள்ளனர். சமூக விரோதிகளால் அதிமுக பொதுக்குழுவிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என நினைத்து டிஜிபியிடம் மனு அளித்துள்ளோம். உரிய பாதுகாப்பு வழங்குவதாக டிஜிபி உறுதியளித்தார்.

கொரோனா விதிமுறைகள்
அரசு அறிவிக்கும் கொரோனா விதிமுறைகள் பொதுக்குழுவில் பின்பற்றப்படும். வானகரம் பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு தரும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதுகாப்பு தர காவல்துறை தவறவிட்டது.பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடக்கும் என்று அறிவித்து 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

சமூக விரோதிகள் குழப்பம்
முன்னாள் முதலமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் பொதுக்குழுவில் கலந்து கொள்ள உள்ளனர். எனவே அமைதியை சீர்குலைத்து சமூக விரோதிகளை தூண்டி பொதுக்குழுவில் குழப்பத்தை விளைவிக்க சிலர் முயற்சிக்கலாம்.போக்குவரத்து பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டியது காவல்துறையின் வேலை.

சசிகலாவிற்கு உரிமையில்லை
டீசல் விலை ஏறியுள்ள நிலையில், சசிகலா ஊர் ஊராக பயணம் செய்வது வீண் வேலை.அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவதற்கு எந்த உரிமையும் இல்லை. கட்சிக்கு எதிராக அதிமுகவினர் யார் செயல்பட்டாலும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications