சதிகாரங்க.. அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு போறாங்க.. பொதுக்குழு செல்லாது.. வைத்திலிங்கம் தடாலடி!
சென்னை : புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டால் தான் புதிய பொதுக்குழுவுக்கான தேதி செல்லும் என்றும் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்றைய பொதுக்குழு கூட்டம் ஒற்றைத் தலைமை மோதலால் பாதியில் கலைந்த நிலையில், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வைத்திலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் கையில் கிடுக்கிபிடி?.. சுக்குநூறாகும் மாஸ்டர் பிளான்?.. புட்டு புட்டு வைத்த வைத்திலிங்கம்
கலைந்த பொதுக்குழு
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் இன்று காலை பரபரப்பாக தொடங்கியது. பல்வேறு கூச்சல் குழப்பங்களுக்கு இடையே தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கலைந்தது. ஒற்றைத் தலைமை குறித்து எடப்பாடி ஆதரவாளர்களின் அமளியால் பொதுக்குழு பாதியில் கலைந்தது.
மேடையில் இருந்து இறங்கிய வைத்திலிங்கம்
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி வருவதற்கு முன்பே அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளருமான வைத்திலிங்கம் பொதுக்குழு கூட்ட அரங்கில் நுழைந்து மேடையில் ஏறினார். அப்போது எடப்பாடி ஆதரவாளர்கள் வைத்திலிங்கத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். துரோகி வைத்திலிங்கமே வெளியே போ என்று அ.தி.மு.க தொண்டர்கள் கோஷமிட்டதால் அதிர்ச்சியடைந்த வைத்திலிங்கம் பொதுக்குழு மேடையில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் ஓபிஎஸ் உடன் சேர்ந்து மேடையேறினார்.
பொதுக்குழுவில் பிரச்சனை
பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வந்தன. மேடையில் நடந்த சம்பவங்களும் ஓ.பி.எஸ்ஸை அச்சுறுத்தும் வகையில் இருந்தன. ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டவுடன், பொதுக்குழு மேடையில் இருந்து ஓபிஎஸ் எழுந்தார். அப்போது, அவருடன் எழுந்து மைக்கில் பேசிய வைத்தியலிங்கம், ‘சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் இந்த கூட்டத்தை நிராகரிக்கிறோம்' எனத் தெரிவித்தார். இதையடுத்து ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.
பொதுக்குழு அறிவிப்பு செல்லாது
அதனைத் தொடர்ந்து வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம், சட்டத்துக்குப் புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டால் தான் புதிய பொதுக்குழுவுக்கான தேதி செல்லும். அதிமுக-வை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.