தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி
சென்னை: இந்தியாவில் 7 ஆயிரத்து 349 ரயில் நிலையங்கள் உள்ளது. இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள 18 ரயில்வே மண்டலங்களில், 68 கோட்டங்கள் உள்ளன. தெற்கு ரயில்வேயில் 827 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம் அருகே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், கால்நடைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ரயில்களை பாதுகாப்பாக இயக்க முடிவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ரயில்வே உலகிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. அரசின் நிறுவனமாக இருக்கிறது.. இந்தியாவில் 7 ஆயிரத்து 349 ரயில் நிலையங்கள் இருக்கிறது. இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள 18 ரயில்வே மண்டலங்களில், 68 கோட்டங்கள் இயங்கி வருகிறது. ரயில்வே துறைக்கு நாடு முழுவதும் 69 ஆயிரத்து 512 கிலோ மீட்டர் நீளத்துக்கு அகல ரயில் பாதை இருக்கிறது. தினந்தோறும் சராசரியாக 13 ஆயிரத்து 198 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 2 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ரயில்வே நிர்வாக சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது.

அந்தவகையில், ரயிலின் வேகம் 110 கிலோ மீட்டருக்கு மேல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் பொதுமக்கள், கால்நடைகள் எளிதில் மற்றும் அத்துமீறி நுழையும் வகையில் உள்ள இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பான ரயில் இயக்கத்தை உறுதி செய்யவும், அத்துமீறி நுழைவதை தடுக்கவும் தண்டவாளங்களின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் (பாதுகாப்பு வேலி) அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, ரயில்வே தண்டவாள பகுதியில் தடுப்பு சுவர் இல்லாததால் பொதுமக்கள், கால்நடைகள் அத்துமீறி நுழைந்து தண்டவாளங்களை கடந்து செல்லும்போது விபத்துகள் ஏற்படுவது தொடர்கிறது. இதுபோன்ற சம்பவங்களை முழுவதுமாக தடுக்க வகையில் இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி, இந்திய ரயில்வேயில் 16 ஆயிரத்து 398 கிலோ மீட்டர் நீளத்திற்கு தண்டவாளங்களின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், மண்டல வாரியாக அதிகபட்சமாக வட மத்திய ரயில்வேயில் 2,721 கிலோ மீட்டரும், தென்மேற்கு ரயில்வேயில் 2,326 கிலோ மீட்டரும், மேற்கு ரயில்வேயில் 2,257 கிலோ மீட்டரும், வடமேற்கு ரயில்வேயில் 1,539 கிலோ மீட்டரும், மேற்கு மத்திய ரயில்வேயில் 1,415 கிலோ மீட்டர் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. தெற்கு ரயில்வேயில் 827 கிலோ மீட்டருக்கு தடுப்பு சுவர் நிறுவப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், கால்நடைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ரயில்களை பாதுகாப்பாக இயக்க முடிவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications