‘ஹாப்பி பர்த்டே உதயண்ணா’..மொட்டை வெயிலில் பள்ளி குழந்தைகள்! அநீதிகளுக்கு அளவே இல்லையா..வானதி காட்டம்
சென்னை: தென்காசி மாவட்டத்தில் ஐந்தருவி அருகே உள்ள ஒரு பள்ளியில் உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறார்களை மைதானத்தில் நிற்க வைத்து 'ஹாப்பி பர்த் டே உதயண்ணா' என கூற வைத்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் அநீதிகளுக்கு ஒரு அளவே இல்லையா தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி தலைவரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நவம்பர் 27ஆம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதனையடுத்து திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மேலும் சென்னையில் உதயநிதி உதய நாள் விழா என்ற பெயரில் ஒரு மாதத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் ஐந்தருவி அருகே உள்ள ஒரு பள்ளியில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறார்களை நிற்க வைத்து 'ஹாப்பி பர்ஹ் டே உதயண்ணா’ என கூற வைத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த வீடியோவைப் பகிர்ந்து,"எங்கள் வீட்டுப் பிள்ளைகள் மொட்டை வெயிலில் நின்று உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுமளவிற்கு நீங்கள் என்ன தேசம் போற்றும் தியாகியா? நாடு கண்ட நல்லவரா? அல்லது உலகப் புகழ்பெற்ற உத்தமரா? யார் நீங்கள் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே? தந்தையின் சிபாரிசில் சொகுசாக துணை முதல்வர் பதவி வாங்கியவர் அவ்வளவுதானே?
உங்கள் அநீதிகளுக்கு ஒரு அளவே இல்லையா தமிழக துணை முதல்வர் திரு. @Udhaystalin அவர்களே?
— Vanathi Srinivasan (@VanathiBJP) November 26, 2024
தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளிச் சிறுவர்களை உச்சி வெயிலில் நிற்க வைத்து உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் உங்களின் கழக உடன்… https://t.co/5b8wGpVTUD
தென்காசி மாவட்டத்தில் ஐந்தருவி அருகே உள்ள ஒரு பள்ளியில் உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி சிறார்களை பட்டப்பகலில் மொட்டை வெயிலில் நிற்க வைத்து உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூற கட்டாயப்படுத்தியுள்ள, திரு. அன்பில் மகேஷின் அடியாட்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவர் என்ற பொறுப்பில் கண்ணும் கருத்துமாக சேவையாற்றும் நீங்கள், எப்போதுதான் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செயல்படுவீர்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த பதிவை பகிர்ந்துள்ள பாஜக எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிரணி செயலருமாகிய வானதி சீனிவாசன்,"உங்கள் அநீதிகளுக்கு ஒரு அளவே இல்லையா தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி அவர்களே? தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளிச் சிறுவர்களை உச்சி வெயிலில் நிற்க வைத்து உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர் உங்களின் கழக உடன் பிறப்புகள்.
தமிழக மாணவர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து உங்கள் இஷ்டம் போல ஆட்டிப் படைப்பது இது ஒன்றும் முதன்முறையல்ல. குறிப்பாக உங்களுக்கு தொடர்புடைய நிகழ்வுகளில் மட்டும் தமிழக பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் பணியாட்களைப் போல நடத்தப்படுவதும், தமிழக துணை முதல்வரான நீங்களே இதுபோன்ற அவலங்களைக் கண்டிக்காமல் ஊக்குவிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உங்கள் தந்தையான தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உங்களுக்கு 100/100 மதிப்பெண் வழங்கி அழகுபார்த்தது இதற்குத்தானா? பிறந்தநாள் வாழ்த்து என்பது அன்பின்பேரில் கிடைப்பது என்பதை மறந்துவிட்டு, வாழ்த்து சொல்லச் சொல்லி பள்ளிக்குழந்தைகளை இவ்வாறு கட்டாயப்படுத்துவது தான் திராவிட மாடல் அரசா? உங்களின் தற்பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ள தமிழக பள்ளி மாணவர்கள் தான் கிடைத்தார்களா?” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications