கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் இருந்தால் கடன் தள்ளுபடி.. விஜய் சொன்னது நிறைவேறுமா
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்த தேர்தல் வாக்குறுதி, விவசாயிகள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதாக அவர் அறிவித்திருந்தாலும், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.!
நடிகர் விஜய் முதல்வர் நாற்காலியில் இன்று அமர்ந்துள்ளார்.. இந்நிலையில், தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் மீண்டும் விவாதங்களை கிளப்பியுள்ளன.

குறிப்பாக, ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி
அதேசமயம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக சூழலில், இத்தகைய அறிவிப்பை ஒரு புதிய அரசு எவ்வாறு செயல்படுத்தப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வாக்குறுதி சாத்தியமா அல்லது இதில் சவால்கள் இருக்குமா என்பதை ஆராய்வது அவசியமாகிறது.
இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, "கூட்டுறவு வங்கிகளின் நிதி நிலையை பொறுத்தவரை, ஒரு தள்ளுபடி அறிவிக்கப்படும்போது அந்த இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வங்கிகளுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், வங்கிகளின் சுழற்சி நிதி பாதிக்கப்பட்டு, அடுத்த பருவத்திற்கு விவசாயிகளுக்கு புதிய கடன்களை வழங்க முடியாத தேக்கநிலை உருவாகும். இது ஒட்டுமொத்த கூட்டுறவுத் துறையின் செயல்பாட்டையே பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசு நிதிச்சுமை
அதுமட்டுமல்லாமல், தேர்தல் கால தள்ளுபடி அறிவிப்புகள் விவசாயிகளிடையே கடன் திருப்பிச் செலுத்தும் ஆர்வத்தைக் குறைப்பதோடு, நேர்மையாக கடனைச் செலுத்தி வரும் விவசாயிகளுக்கு இது ஒருவித ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அமையும். இது நீண்ட கால அடிப்படையில் வங்கிச் சேவையின் நடைமுறைகளை பாதிக்கும் காரணியாக மாறும்.
கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு உடனடி நிவாரணமாக இருக்கலாம்.. ஆனால் நீண்டகால விவசாய வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.. பாசன வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப முதலீடுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை இத்தகைய கடன் தள்ளுபடி திட்டங்கள் எடுத்துக் கொள்ளும் சூழலும் உள்ளது..
5 ஏக்கர் விவசாய நிலம்
அதேபோல தகுதியான பயனாளிகளைக் கண்டறிவதில் உள்ள தரவு சிக்கல்கள், 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களின் துல்லியமான லிஸ்ட்டை தயாரித்தல் போன்றவற்றில் குளறுபடிகள் ஏற்பட்டால், திட்டத்தின் நோக்கம் பாதிக்கப்படலாம்.
மாநில அரசின் நிதி நிலை ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும்போது, மத்திய அரசின் நிதிப் பங்கீடு மற்றும் பேரிடர் நிதிக்காக காத்திருக்க வேண்டிய சூழல் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சவால்களை ஏற்படுத்தும்" என்கிறார்கள்.
தமிழக விவசாயிகளுக்கு பயிர்க்கடன்
உண்மையிலேயே, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசுக்கு சவாலான காரியமாக இருக்கும்.. ஏழை மற்றும் குறு விவசாயிகளின் பாரத்தைக் குறைக்கும் நல்ல நோக்கத்தை இது கொண்டிருந்தாலும், வெறும் கடன் தள்ளுபடியுடன் நின்றுவிடாமல் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதையும், புரோக்கர்கள் இல்லாத சந்தை வாய்ப்புகளையும் உறுதி செய்வதே நிலையான தீர்வாக அமையும்.
அதுமட்டுமல்ல, கடன் தள்ளுபடி என்பது தற்காலிக நிவாரணமே தவிர, அது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுமையாக மாற்றிவிடாது.
தவெக அரசின் சவால்
அரசு தரப்பில் பார்க்கும்போது, ஒரு புதிய அரசியல் கட்சி ஆட்சிக்கு வரும்போது இவ்வளவு பெரிய நிதிச் சுமையைத் தாங்குவது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
இப்போதைய தமிழக அரசின் கடன் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறையைக் கணக்கில் கொண்டால், இந்த வாக்குறுதியைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது சாதாரண காரியமல்ல. அதனால் இந்த வாக்குறுதி வெறும் தேர்தல் அறிவிப்பாகத் தங்கிவிடாமல் நிஜமாக வேண்டுமானால், தேவையான நிதியை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதற்கான திட்டங்களையும் கட்சித் தலைமை இப்போதே திட்டமிடுவது அவசியமாகும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications