Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டுறவு சங்கத்தில் பணப்பலன், ஓய்வூதியம்: 20 ஆண்டு கால பெண் ஊழியரின் கண்ணீர் போராட்டத்திற்கு வெற்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவு சங்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வரும் நலன்கள் ஏராளம்.. அதனால்தான் இத்தகைய உன்னதமான நோக்கம் கொண்ட ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில், ஒரு பெண் ஊழியர் அதிகாரிகளால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டதும், அதற்கு எதிராக 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு இப்போது நீதிமன்றம் மூலம் நீதி கிடைத்துள்ளதும் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.. என்ன நடந்தது?

கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் சாமானிய மற்றும் நடுத்தர வர்க்க ஊழியர்களுக்கு குறைந்த வட்டியிலும் எளிய நடைமுறைகளிலும் கடன் உதவிகளை வழங்கி அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்குப் பெரும் உறுதுணையாக விளங்குகின்றன. இத்தகைய அமைப்புகள் உறுப்பினர்களின் சேமிப்பை பாதுகாப்பதோடு அவசர காலத் தேவைகளுக்கான நிதி ஆதாரமாகவும் திகழ்கின்றன.

Cooperative Society Pension Legal Battle Madras High Court

கூட்டுறவு சங்கங்கள் நன்மைகள்

இப்படிப்பட்ட சூழலில், சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பு பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.. கடந்த 1994ம் ஆண்டு அந்த கூட்டுறவு சங்கத்தில் நடந்த சம்பவம் இதுவாகும்..

நாககேசரி - உமா வழக்கு

உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அப்போது பணியில் சேர்ந்தார். 1998ம் ஆண்டு அந்தச் சங்கத்தின் உதவி செயலாளராக பொறுப்பேற்ற நாககேசரி என்பவர் உமாவை தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரிவிற்கு மாற்றி அவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமும், அதிருப்தியும் அடைந்த உமா, இது தொடர்பாக 2001 ஏப்ரல் மாதம் சங்கத் தலைவரிடம் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் நாககேசரியின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு அவரது பிரிவில் பெண் ஊழியர்களை நியமிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம்

இருந்தாலும், 2001 ஜூலை மாதம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த நாககேசரி உமாவை பழிவாங்க முடிவு செய்தார்.. இதற்காக பணி ரீதியாக பல தொல்லைகளை கொடுத்துள்ளார்.

இதனால் மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஊழியர் மாநில மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மகளிர் ஆணையம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து நிர்வாகம் தரப்பில் மூன்று விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.. ஆனாலும், அவை நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் உமாவின் தரப்பு வாதங்களைக் கேட்காமலும் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டன.

நிர்மலா சீதாராமன்

இதன் உச்சகட்டமாக 2003 ம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி உமா மீது 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.. .

இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில் அப்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்த நிர்மலா சீதாராமன், ஓய்வு பெற்ற நீதிபதி கே. சம்பத் மற்றும் ஓய்வு பெற்ற டிஜிபி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில் உமா மீதான புகாரில் விசாகா வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் நாககேசரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் பணி வழங்கவும் அந்தக் குழு பரிந்துரைத்தது. நாககேசரிக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கிய பிறகும் நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதியம், பணப்பலன்கள்

இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் 2023ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். ஆனால் 2004ம் ஆண்டிலிருந்து அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மட்டும் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வந்தது. தனக்குச் சேர வேண்டிய ஓய்வூதியப் பலன்கள் மற்றும் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கடுமையாக சாடினார்.

ஆனால் அனைத்துக்கும் மூலகாரணமான குற்றம் சாட்டப்பட்ட நாககேசரி இறந்துவிட்டார். அவர் மரணமடைந்துவிட்ட நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பெண் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கையை முடிக்காமல் வைத்திருப்பது சட்டப்படி செல்லாது என்று நீதிபதி குறிப்பிட்டார்.

20 ஆண்டு கால கண்ணீர் போராட்டம்

எனவே உமா ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் அனைத்து பணப்பலன்களையும் நிலுவை தொகையையும் 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உத்தரவிட்டார். ஒருவேளை காலக்கெடுவுக்குள் வழங்கத் தவறினால் வட்டி விகிதம் 9 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தினார்.

கூட்டுறவு கடன் சங்கத்தில், ஒரு பெண் ஊழியர் அதிகாரிகளால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டதும், அதற்கு எதிராக 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு தற்போது நீதிமன்றம் மூலம் நீதி கிடைத்துள்ளதும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்பட்டு வருகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+