திருவள்ளூர் டூ சென்னை.. கூவம் பாலம் மூழ்கியது.. 8 கிமீ சுற்றி செல்லும் 15 கிராம மக்கள்
சென்னை: திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பலம் துண்டிக்கப்பட்டதால் 15 கிராம மக்கள் 8 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.. கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன் எச்சரிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரைப்பாலத்தின் இரு பக்கங்களிலும் தடுப்புகள் அமைத்து தடை செய்துள்ளனர்.
சென்னையின் மூன்று ஆறுகளில் கூவம் ஆறும் ஒன்று. ஒரு காலத்தில் தூய்மை நதியாக இருந்த கூவம் சாக்கடையாக மாறிவிட்டது. கூவம் என்றாலே சாக்கடை என்கிற பொருள் கொள்ளும் அளவிற்கு அங்கு கழிவுகள் கலந்து நாசம் ஆனது. ஆனால் உண்மையில் கூவம் ஆறு சென்னையில் தான் சாக்கடையாக இருக்கிறது. திருவள்ளூரில் அப்படி இல்லை. இன்றும் ஓரளவு தூய்மையான ஆறாகவே இருக்கிறது.

கூவம் ஆறு சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கேசாவரம் எனும் சிற்றூரில் கல்லாறின் கிளையாறாக உருவாகி ஓடுகிறது. கூவம் ஆறு உருவாகும் இடத்தில் தான் தக்கோலம் அமைந்துள்ளது. இங்கு உருவாகும் கூவம் ஆறு சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி 400 சதுரகிலோமீட்டர் ஆகும். ஆற்றுப் படுக்கையின் அகலம் 40 முதல் 120 மீட்டர் வரை இருக்கும். கூவம் ஆற்றை பொறுத்தவரை அதிகபட்சமாக 22,000 கன அடி தண்ணீர் திறக்க முடியும்.. 2005 ஆண்டில் ஆற்றில் வெள்ளம் வந்தபோது ஆற்றில் 21,500 கன அடி தண்ணீர் ஓடியது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரம்பாக்கம், சத்தரை, கொண்டஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியில் அமைந்துள்ள கேசவரம் அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சத்தரை, கொண்டஞ்சேரி இடையே கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது. இதனால் கொண்டஞ்சேரி, மப்பேடு, கொட்டையூர், கிழச்சேரி, உளுந்தை, கூவம், பன்னுர் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு செல்வதற்கு பேரம்பாக்கம் வழியாக 8 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் கிராமமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன் எச்சரிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரைப்பாலத்தின் இரு பக்கங்களிலும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து அரசு தர வேண்டுமென அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூரில் மட்டுமல்ல, அம்பத்தூர் மதுரவாயல் இடையே உள்ள தரைப்பாலமும் மூழ்கி உள்ளது.












Click it and Unblock the Notifications