அடடா.. கொரோனா தமிழ்நாட்டிலும் வேலையை காட்டுதே! 7 மாதங்களுக்கு பிறகு ஒரே நாளில் அதிக பாதிப்பு.. ஷாக்!
சென்னை: தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. கடந்த பல மாதங்களாக சிங்கிள் டிஜிட்டில் இருந்து வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை சட்டென கூடியுள்ளது.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் வாக்கில் கேரளாவில் சுமார் 450 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக கொரோனா 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அங்கு 750க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் ஏராளமானோருக்கு, காய்ச்சலுடன் சுவாச பிரச்சனை ஏற்பட்டதால் பலர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அவர்களை சோதனை செய்ததில் அவர்களில் பெரும்பான்மையானோருக்கு JN1 வேரியண்ட் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூட செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களில் இல்லாத அளவுக்கு அதாவது, கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் (டிசம்பர் 16) நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 309 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்களையும் சேர்த்து தற்போது மொத்தம் 48 பேர் கொரோனா பாதிப்புக்காக தமிழ்நாட்டில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 18 பேர். கோவையில் 7 பேரும், திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா 4 பேரும், கன்னியாகுமரியில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் திடீர் உயர்வு தமிழகத்தில் மீண்டும் கொரோனா தனது வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனினும், தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், 3,4 நாட்களில் குணமாகி விடுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications