குட் நியூஸ்! கட்டுக்குள் வந்த கொரோனா.. தமிழ்நாடு மட்டுமில்லை புதுவையிலும் தொடர்ந்து குறையும் கொரோனா
சென்னை: சில மாதங்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் வெறும் 3 மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2ஆம் அலை தொடங்கியது. அந்த சமயத்தில் தேர்தல் பரப்புரைகளும் படு ஜோராக நடக்க வைரஸ் பாதிப்பு மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது.
குறிப்பாகக் கடந்த மே மாதத்தில் வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டது. இதையடுத்து முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கு
கடந்த மே மாதம் தொடங்கி மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இடையில் ஜூன் மாத இறுதியில் மட்டும் சில பகுதிகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட அரசு நிர்வாகம் தேவையான இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் நிலைமை கையை மீறிச் செல்வது தடுக்கப்பட்டது. அதன் பிறகு மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் நேற்று 1585 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னை, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டியிருந்தது. சென்னையில் 165 பேருக்கும் கோவையில் 190 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதேபோல ஈரோட்டில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தஞ்சையில் (98), செங்கல்பட்டு மாவட்டங்களிலும் (92) சற்றே அதிகமாக இருந்தது.

எந்தெந்த மாவட்டங்கள்
கொரோனா காரணமாக நேற்று 27 பேர் பலியாகினர். தமிழ்நாட்டில் இதுவரை 34,761 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாகத் திருப்பூரில் ஐந்து பேரும், கோவையில் நான்கு பேரும், சென்னையில் 3 பேரும் உயிரிழந்தனர்.தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 18,603 ஆகச் சரிந்து உள்ளது. செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் நேற்று 1,842 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 25,50,710ஆக அதிகரித்துள்ளது.

புதுவையில் என்ன நிலை
தமிழ்நாட்டைப் போலவே புதுவையிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 73 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். புதுவையில் வெறும் 30 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. புதுவையில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 765ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.33%ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.47% ஆகவும் உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.91%அக அதிகரித்துள்ளது.

தளர்வுகளால் கொரோனா அதிகரிக்குமா
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. இருப்பினும், கடந்த காலங்களைப் போல இல்லாமல், இந்த முறை ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தியேட்டர் திறப்பிற்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறதா என்பது வரும் காலங்களில் தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications