சென்னையில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரிப்பு... மக்களின் ஒத்துழைப்பு தேவை - பிரகாஷ்
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதை போல இந்த ஆண்டு செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பணிகள் தொடங்குகிறது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா பரவல் சென்னையில் ஒரே மாதத்தில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். மக்கள் எல்லாரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு 4500 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது. மக்கள் அதிகம் வாழும் இடமான சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரே நாளில் 1500க்கும் மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.200 அபராதம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாளொன்றுக்கு 2,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு இக்கட்டான தருணம் என்றார்.

பணிகள் தொடக்கம்
ஒரு மாதத்திலேயே பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதை போல இந்த ஆண்டு செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பணிகள் தொடங்குகிறது என்று தெரிவித்தார். ஒருவர் தலா 250 வீடுகள் வீதம் ஆய்வு மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார்.

வீடு வீடாக பரிசோதனை
தொடர்ந்து பேசிய பிரகாஷ், வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த உள்ளோம். பாதிப்புகளை உடனுக்குடன் கண்டறியும் போது உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும். அதே போல, பரவலையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
சென்னையில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டது. தெரு வாரியாக தினமும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

தடுப்பூசி அவசியம்
கடந்த ஒரு மாதத்தில் 10 மடங்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் 2 தெருக்களுக்கு ஒரு தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
3 பேருக்கு தொற்று இருந்தால் கட்டுப்பாட்டு பகுதி என ஸ்டிக்கரும், 6 பேர் இருந்தால் பேனரும் வைக்கப்படும். 10 பேருக்கு மேல் தொற்று இருந்தால் அப்பகுதியில் வருகை பதிவேடு உடன் போலீஸ் கண்காணிக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை என்பதால் அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மக்கள் ஒத்துழைப்பு
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் எல்லாரும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் பிரகாஷ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications