வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் கூடுதல் தளர்வுகள்.. எதற்கு தடை? எவற்றுக்கு அனுமதி.. முழு தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1-8 வகுப்புகளுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள், திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. இதையடுத்து நிலைமை கையைவிட்டுப் போவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கொரோனா பரவல் குறையக் குறைய அதற்கேற்ப ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு
பண்டிகை காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என முதலில் அஞ்சப்பட்டது. இருப்பினும், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கவில்லை. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு
அதன்படி தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் 'சுழற்சி' அடிப்படையில் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளுடன் இருக்கும் பார்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகள் செயல்படுவதற்கான நேரக் கட்டுப்பாடுகள் தளர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அனுமதி
பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு கடைகள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் இரவு 11 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டுப் போட்டிகள், பயிற்சிகள், நீச்சல் குளங்கள், ஆகியவற்றை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவைத் தவிர இதர மாநிலங்களுக்கு 100% இருக்கைகளுடன் ஏசி மற்றும் சாதாரண பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் நிகழ்ச்சிகளுக்குத் தொடரும் தடை
கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றிப் படப்பிடிப்புகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவரும் 2 டோஸ் வேக்சின் போட்டிருக்க வேண்டும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரம் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் வரும் நாட்களில் பண்டிகை காலங்களில் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

பண்டிகை காலம்
பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்கவும், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை உறுதி செய்ய சில கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஏற்கனவே மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பகுதிகளில் ஈடுபட்டு, மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications