தீயாய் பரவும் கொரோனா..ஊரடங்கு வருமா?..வதந்திகளை நம்பாதீர்கள் என்கிறார் மா.சுப்ரமணியன்
சென்னை: கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்தது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகியிருந்தது.

கடந்த 6 மாதங்களில் ஏற்பட்ட அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவாகத்தான் இருந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 2994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,354 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,876 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஏராளமான உயிர்களை கபளீகரம் செய்தது. உலகம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பொருளாதார முடக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் நடத்தி தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர். அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதின் விளைவாக தொற்று பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. இதனால் உலகம் முழுவதும் சகஜநிலை திரும்பியது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது. முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி. வகை திரிபு பின்னர் இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் வரை கொரோனா தினசரி பாதிப்பு 200க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு நூற்றுக்கும் மேற்பட்டோரோ தாக்கியுள்ளது. இதனால் மீண்டும் லாக்டவுன் அமலாகுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வோர் இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயம் என மாநில சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications