கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால்.. கிராமங்களும், சிறிய மருத்துவமனைகளும் கடுமையாக பாதிப்பு
சென்னை: கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் கிராமப்புறங்கள்தான் நகரங்களை விட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைக்கு பல காரணங்கள் உள்ளன. கோ-வின் செயலியில் தடுப்பூசி செலுத்துபவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இது நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு சற்று எளிமையாக இருக்கும். ஆனால் ஆங்கில அறிவு தேவை என்பதால் படிக்காத பாமர மக்களுக்கு இது கஷ்டமாக இருக்கிறது. கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் இதில் பதிவு செய்வது மிகக் குறைவாக இருக்கிறது.

மேலும் கிராமப்புறங்களில் தடுப்பூசி பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பதால் அச்சத்தின் காரணமாகவும் கணிசமான மக்கள் பதிவு செய்வது கிடையாது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புள்ளிவிவரப்படி நாட்டின் ஒட்டுமொத்த தொலைதொடர்பு அடர்த்தி 87 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய 7 தொலைத்தொடர்பு வட்டங்களில் தொலைதொடர்பு அடர்த்தி 100 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது. அதாவது இந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைதொடர்பு இணைப்புகளை பெற்றிருக்கிறார்கள்.
ஸ்மார்ட்போன் பயன்பாடு இந்த பகுதிகளில் அதிகமாக இருக்கிறது. அதேநேரம் ஒவ்வொரு 100 சந்தாதாரர்களின் 58 பேர் மட்டும்தான் இன்டர்நெட் பயனாளர்களாக இருக்கிறார்கள் என்று தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவிக்கிறது. அதாவது கிட்டத்தட்ட பாதி பேர்தான் தங்களது மொபைல் போன் மூலமாக இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த டிஜிட்டல் பயன்பாடு வித்தியாசம் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதிலும் எதிரொலிக்கிறது.
நகரங்களில் உள்ள பெரிய அளவுக்கான கார்ப்பரேட் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளும், உயிர்காக்கும் சில மருந்துகளும் போதிய அளவுக்கு கிடைக்கும் நிலையில், சிறிய மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இப்படி இருக்கும்போது கிராமப்புறங்களில் நிலைமையை சொல்லி தெரியவேண்டியது கிடையாது.
தடுப்பூசி உற்பத்தியில் இருந்து 50 விழுக்காடு அளவுக்கு மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. மற்றவற்றை மாநில அரசுகள் கொள்முதல் செய்து கொள்ளவேண்டும். கொள்முதல் செய்வதோடு அவற்றை பாதுகாப்பாக எடுத்துச் செல்வது உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநில அரசு செய்தாக வேண்டிய பொறுப்பு இப்போது இருக்கிறது. கிராமப்புறங்களில் அதற்கான கட்டமைப்பு இல்லை. எனவே கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்துவது என்பது நடைமுறையில் சிரமமான காரியமாக மாறியுள்ளது.
சுமார் 50 முதல் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட தலைநகரங்களில்தான் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவ்வளவு தூரம் பயணம் செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. தமிழகத்தில் கூட இந்த நிலைமை இருக்கிறது என்றால் மருத்துவ கட்டமைப்பு தமிழகம் அளவுக்கு முன்னேற்றம் அடையாத இன்னும் எத்தனையோ மாநிலங்களில் நிலைமை எப்படி இருக்கும். ஆகமொத்தம், கிராமப்புறங்கள் மற்றும் சிறிய மருத்துவமனையில் தடுப்பூசி இல்லாமல் அவதிப்படும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications