குட்நியூஸ்.. தமிழகத்தில் உலுக்கும் கொரோனா செகண்ட் வேவ்.. எப்போது கட்டுக்குள் வரும்?
சென்னை; தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை எப்போது கட்டுக்குள் வரும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இவர்களின் கணிப்பு படி வரும் மே மாதத்தில் கொரோனா கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளதாம். அதேநேரம் இம்மாத உச்சம் தொடும் என்கிறார்கள்.
சீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் அடுத்த இரண்டு மாதத்தில் அதாவது மார்ச் மாதத்தில் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவும் வேகம் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கிட்டத்தட்ட 6 மாதங்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் கடந்த செப்டம்பர் மாதம் கட்டுக்குள் வர தொடங்கியதால் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன் பிறகு கோவில்கள், சினிமா தியேட்டர்கள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் படிப்படியாக விலக்கப்பட்டது. ஜனவரி முதல் இயல்பு நிலை திரும்பியது.

அரசியல் கட்சிகள்
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா குறையத் தொடங்கிய வேளையில் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவில்லை. இது ஒருபுறம் எனில தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அனைத்து கட்சிகளும் கூட்டத்தை கூட்டி பிரசாரத்தில் தீவிரம் காட்டின. கூட்ட நெரிசல் ஒருபுறம் எனில், தொண்டர்கள் யாரும் முககவசம் அணியவில்லை. பொதுக்கூட்டங்களில் சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. இதன்காரணமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது.

4000 பேருக்கு பாதிப்பு
தேர்தல் தேதிக்கு ஒரு வாரம் என்கிற நிலையில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்தது. 600 என்கிற நிலையில் இருந்து 4 ஆயிரம் தினசரி பாதிப்பு என்ற நிலைக்கு தற்போது வந்துள்ளது. சென்னையில் தினசரி ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள்
தேர்தல் பிரசார கூட்டங்களில் அரசியல் கட்சியினர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காததாலேயே கொரோனா பரவல் அதிகரித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்புடைய பொதுமக்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.

கொரோனா எப்போது குறையும்
இந்நிலையில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என்று சுகாதாரத்துறை கணித்துள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் திருவிழா மற்றும் மதக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிகவளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எனினும். மே மாதம் முதல் தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுக்குள் வரும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். . கொரோனா தொற்றை தடுக்க கண்டிப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினால் தமிழகத்தில் மே மாதம் முதல் கொரோனா கட்டுக்குள் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications